திருச்சி: ரேஷன் கார்டு-தவிக்கும் 1000 போலீஸார்
திருச்சி: திருச்சியில் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்த 1,000 போலீசாரை கடந்த முன்று மாதமாக உணவு பொருள் வழங்கல் துறையினர் இழுத்தடித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள போலீசாருக்கு அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ரேஷன் கடை மூலம் மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், போன்ற ரேஷன் பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக போலீஸாருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகர ஆயுதப்படையில் 200 போலீசார், மாநகரில் உள்ள 12 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பணியாற்றும் போலீசார், 4 மகளிர் பிரிவு, குற்றப்பிரிவுகளில் பணியாற்றும் 400 போலீஸார், யூனிட்டுகளில் பணியாற்றும் 200 போலீஸார் என மொத்தம் 1000 போலீஸார், திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மூலம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் துறையிடம் தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைத்தனர். புதிய ரேஷன் கார்டுக்கு காத்திருக்கின்றனர்.
இந்த 1000 போலீசாரின் ரேஷன் கார்டுகளை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெற்றுக் கொண்ட வருவாய்த்துறையினர் இதுவரை அதற்கு மாற்றாக புதிய ரேஷன் கார்டுகளை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் திருச்சி போலீசார் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். கால தாமததுக்குக் காரணம் தெரியவில்லை.