தந்தை மீது வழக்கு: மகளை தண்டிக்க கூடாது - உயர்நீதிமன்றம்
சென்னை: தந்தை மீது உள்ள வழக்கு தொடர்பாக மகளை வீட்டுக் காவலில் வைக்கக் கூடாது, அவரது படிப்புக்கு தடையாக இருக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் பிரிதா. இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எனது கணவர் கலைப்பொருட்கள் மற்றும் சாமி சிலைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார். இதற்காக சுங்கத்துறையிடம் உரிமம் பெற்றுள்ளார். சட்டவிரோதமாக இந்த வாணிபத்தில் அவர் ஈடுபடவில்லை.
ஆனால், சிலை கடத்தல் தடுப்பு போலீசார், சில ஏஜெண்டுகளை பிடித்து விசாரணை செய்தார்கள். அவர்கள் தந்த தகவல்கள் அடிப்படையில், எனது கணவர் மீது பொய் வழக்கு போடுவோம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டினார். ஒரு ஓட்டலில் வைத்து ரூ.25 லட்சம் தரும்படி அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டினார். ஆனால், எனது கணவர் தப்பி ஓடிவிட்டார்.
ஆனால், எனது மகள் படிக்கும் பள்ளிக்கூடம் சென்று போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். எங்கள் இருவரையும் வீட்டிற்குள்ளே வைத்து போலீசார் மிரட்டுகிறார்கள். இதனால் எனது மகள் வெளியே செல்ல முடியவில்லை. படிப்பும் வீணாகிறது.
ஆகவே, எனது மகள் படிப்பில் குறுக்கீடு செய்ய தடை விதிக்க வேண்டும். அவள் சுதந்திரமாக பள்ளிக்கூடம் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
நீதிபதி பால்வசந்தகுமார் மனுவை விசாரித்தார். பின்னர், எக்காரணத்தை முன்னிட்டும் பிளஸ்-2 மாணவியின் படிப்பில் போலீசார் குறுக்கீடு செய்யக் கூடாது என்று. அவர் சுதந்திரமாக வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் சென்று வருவதில் போலீசார் தலையிடக்கூடாது என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications