பேரழிவை நோக்கி இலங்கைத் தமிழ் இனம்: பண்ருட்டி ராமச்சந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கையில் தமிழினிம் பேரழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த சிபிஐ தலைமையிலான இலங்கைத் தமிழர்களைக் காக்க கோரி நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த உண்ணாவிரதத்தை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தினாலும், தமிழ் உணர்வுள்ள அனைவரும் இதில் கலந்து கொண்டிருக்கிறோம். இதனை தேர்தல் கண்ணோட்டத்துடன் அணுகக்கூடாது. இந்த நேரத்தில் தேர்தல், பதவி சுகம் பற்றியெல்லாம் பேசுவது சரியல்ல.

இலங்கையில் தமிழினம் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவத்தின் முப்படைகளும் சூழ்ந்து தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

இதனால் சுமார் 6 லட்சம் தமிழர்கள் அங்கே அகதிகளாகி உண்ண உணவின்றியும், வசிக்க வீடின்றியும், உணவு, மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய வசதிகள் எதுவுமின்றியும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அவர்கள் நாள்தோறும் இடம்விட்டு இடம்மாறி சாலை ஓரங்களிலும், பள்ளிகளிலும், கோயில்களிலும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். அவர்களை இலங்கை அரசு வதைத்து வருகிறது.

இலங்கையில் மனித பேரழிவு நடைபெறுவதாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவ தயார் என்று இங்கிலாந்து மக்கள் தெரிவித்தனர். ஆனால் இலங்கை அரசு தடுத்திவிட்டது.

ஐ.நா. சபை சார்பில் சில தொண்டு நிறுவனங்கள் தமிழர்களுக்கு உதவி வந்தன. அவர்களையும் இலங்கை அரசு வெளியேற்றி வருகிறது.

இத்தகைய சூழலில் இலங்கையில் தற்போது நிலவும் நிலைமையை நாம் அனுமதிக்கக் கூடாது. அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா உடடினயாக செய்ய வேண்டும்.

ஒரு காலத்தில் ஈழப் பகுதிகளில் விமானம் மூலம் இந்தியா மருந்து மற்றும் உணவுப் பொருட்களை வழங்கியதைப் போல மீண்டும் அவர்களுக்கு இந்தியா உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். அவர்களை காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இந்திய அரசுக்கு உண்டு.

இங்கிருந்து ரிமோட் மூலம் டெல்லியை கருணாநிதி இயக்குவதாக சொல்கிறார்கள். இங்கு வந்த சோனியாவும் மத்திய அரசுக்கு கருணாநிதிதான் வழிகாட்டி என்று தெரிவித்தார்.

இப்படிப்பட்ட உலக தமிழர்களின் தலைவரான கருணாநிதி இந்தப் பிரச்சனைக்காக மயிலை மாங்கொல்லையில் கூட்டம் நடத்தாலாமா?

நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் கருணாநிதி கூட்டம் நடத்துவது தமிழக மக்களை ஏமாற்றும், வஞ்சிக்கும் வேலையாகும்.

இந்த உண்ணாவிரதத்திற்கு திமுகவை அழைக்கவில்லை என்று கருணாநிதி கூறுகிறார். நீங்கள் காரியத்தை செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். நாங்கள் கேட்கும் இடத்தில் இருக்கிறோம்.

நீங்கள் செய்யத் தவறிய கடமையை, காரியத்தை சுட்டிக் காட்டவும், தட்டிக் கேட்கவும்தான் இந்த உண்ணாவிரதத்தை நடத்துகிறோம். எங்கேயாவது கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைப்பார்களா?

எனவே முதலமைச்சர் இந்த உண்ணாரவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்தியா உடனடியாக உதவிப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் தமிழர்கள் பகுதிக்கு இந்த உதவிப் பொருட்களை நேரடியாக எடுத்துச் சென்று வழங்க வேண்டும். இவற்றை இலங்கை அரசிடம் தரக்கூடாது.

இதேபோல ஐ.நா. மூலமும் உதவிப் பொருட்களை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இந்திய அரசை ஒரு போதும் தமிழகம் மன்னிக்காது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+