ஹிண்ட்ராப் தலைவர் உதயமூர்த்தியின் மனைவி உள்பட 11 பேர் கைது
கோலாலம்பூர்: மலேசியாவின் இந்து உரிமைகளுக்கான நடவடிக்கை குழுவின் தலைவர் உதயமூர்த்தியின் மனைவி வைஷ்ணவி உதயமூர்த்தி மற்றும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரையும் விடுதலை செய்யக் கோரி பிரதமரிடம் மனு கொடுக்க அவர்கள் முயன்றபோது அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அனைவரும் புத்ரஜெயா காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
உதயமூர்த்தி பாஸ்போர்ட் ரத்து-சிக்கலில் அமைச்சர்:
இகற்கிடையே, லண்டனில் வசித்து வரும் ஹிண்ட்ராப் தலைவர் உதயமூர்த்தியின் பாஸ்போர்ட்டை மலேசிய அரசு ரத்து செய்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த செய்தியை மலேசிய உள்துறை அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் மறுத்திருந்தார். ஆனால் இங்கிலாந்து அரசு வெளியிட்டு ஆவணங்களை மேற்கோள் காட்டி ஹிண்ட்ராப் அமைப்பு இதை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோலாலம்பூரில் நடந்த மாபெரும் இந்தியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மலேசியாவை விட்டு வெளியேறினார் உதயமூர்த்தி. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்ற அவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது பாஸ்போர்ட்டை மலேசிய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதை அமைச்சர் அல்பார் கடந்த மே 26ம் தேதி மறுத்திருந்தார். அவர் கூறுகையில், உதயமூர்த்தியின் பாஸ்போர்ட் இன்னும் செயல்பாட்டில்தான் உள்ளது. அது ரத்து செய்யப்படவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் ஹிண்ட்ராப் ஒருங்கிணைப்பாளரான தேனேந்திரன், இதை மறுத்து அதற்குரிய ஆதாரத்தை காட்டியுள்ளார். இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் ஆவணத்தை மேற்கோள் காட்டி அவர் உதயமூர்த்தியின் பாஸ்போர்ட்டை மலேசிய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
தேனேந்திரன் பேசுகையில், அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் பொய் பேசியிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. தனது பொய்யான பேச்சின் மூலம் நாட்டு மக்களையும், நாடாளுமன்றத்தையும் அவர் திசை திருப்பியுள்ளார். அவமதித்து விட்டார்.
அமைச்சரின் பேச்சு குறித்து விசாரணை நடத்த வேண்டும். மக்களுக்குத் தவறான தகவலைத் தெரிவித்துள்ளதால் அதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் அல்பாருக்கு எதிராக நாடு முழுவதும் 42 காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் இதுவரை அவர் மீதுகாவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பாரபட்சமான நடவடிக்கை. சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்பதை காவல்துறை உணர வேண்டும்.
தலைவர்கள் மரியாதைக்குரியவர்களாக இருக்க வேண்டும். நாட்டின் பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படக் கூடாது. அல்பார் அமைச்சர் பதவியில் நீடிக்கும் அருகதையை இழந்து விட்டார் என்றார்.
தேனேந்திரனின் புகாருக்கு எதிர்க்கட்சித் தலைவர் லிம் கிட் சியாங்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். தேனேந்திரனின் புகார் அதிர்ச்சி தருகிறது. அமைச்சர் அல்பார் பேச்சை நாடாளுமன்றத்தின் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி விசாரிக்க வேண்டும். அல்பார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடாளுமன்றத்திற்கும்,மக்களுக்கும் அவர் தவறான தகவலைக் கொடுத்துள்ளார். எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.