தீவிரவாதம்: புதிய புலனாய்வு ஏஜென்சி அமைக்கப்படும் - மன்மோகன் சிங்
மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று இரவு பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அவசர அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. சுமார் ஐந்து மணி நேரம் இந்தக் கூட்டம் நடந்தது.
அத்வானி - ராஜ்நாத் வரவில்லை:
இதில், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் அத்வானி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மாறாக அக்கட்சியின் சார்பில் ஜஸ்வந்த் சிங் மற்றும் வி.கே.மல்ஹோத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, புதிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன், பாமக சார்பில் பேராசிரியர் ராமதாஸ், இடதுசாரி தலைவர்கள் ஏ.பி.பர்தான், பிரகாஷ் காரத், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், சமாஜ்வாடி தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், அமர்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தீவிரவாதத்திற்கு எதிரான உளவுப்பிரிவின் செயல்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என கோரப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், தீவிரவாதத் தடுப்பு தொடர்பாக புதிய புலனாய்வு அமைப்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.
பிரதமர் இக்கூட்டத்தின் இறுதியில் பேசுகையில், முழு உறுதியுடன் தீவிரவாதத்தை தடுக்க அனைவரும் போராட வேண்டும். அனைத்து வகையிலும் தீவிரவாதத்தைத் தடுக்க அரசு பாடுபடும்.
சட்டம் பலப்படுத்தப்படும்:
தீவிரவாதத்தை சந்திப்பதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகள் மேலும் பலப்படுத்தப்படும்.
நாட்டில் உள்ள நகரங்களுக்கிடையிலான கண்காணிப்பும், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும். மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே சிறந்த ஒத்துழைப்பு உருவாக்கப்படும்.
தீவிரவாத தடுப்புப் படைகள் மேலும் பலப்படுத்தப்படும். இவை முறைப்படுத்தப்படும்.
பெருநகரங்களில் என்.எஸ்.ஜி படை:
தேசிய பாதுகாப்புப் படைக்கு (என்.எஸ்.ஜி) கூடுதல் வசதிகள் செய்து தரப்படும். படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களில் என்.எஸ்.ஜி படையின் துணைப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும். பிற முக்கிய நகரங்களிலும் இப்படையினரை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
கடல் மற்றும் வான் மண்டலங்களைப் பாதுகாக்க மேலும் வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. கடற்படை, கடலோரக் காவல் படை, கடலோர போலீலஸ் படை மற்றும் விமானப்படை, சிவில் விமான அமைச்சகமும் இதில் ஈடுபடுத்தப்படும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அவ்வப்போது இதுபோன்ற கூட்டங்களை நடத்தி பரிசீலிக்கப்படும்.
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. நாட்டுக்காக இன்னுயிரை நீத்த பாதுகாப்புப் படையினருக்கும் இக்கூட்டம் வீர வணக்கம் செலுத்துகிறது என்று பிரதமர் பேசியதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.