ராஜீவ் பற்றி விமர்சனம்: டைரக்டர் சீமான் காருக்கு தீவைப்பு

தமிழர் எழுச்சி உரை வீச்சு என்ற தலைப்பில் ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை ஆதரித்தும் ராஜீவ்காந்தி படுகொலை பற்றி விமர்சனம் செய்தும் பேசினார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வலியுறுத்தினார். மேலும்
மத்திய அமைச்சர் இளங்கோவன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலரும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினர்.
ஏற்கனவே ராமேஸ்வரத்தில் தமிழ்திரை உலகம் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் சீமான் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். இந் நிலையில் காங்கிரஸ் நெருக்குதலால் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக நேற்றிரவு சென்னையில் சீமான் அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காருக்கு தீ வைக்கப்பட்டது.
சென்னை வளசரவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகில் சீமானின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வாயிலில் நிறுத்தப்பட்ட சீமானின் காருக்கு யாரோ தீ வைத்துள்ளனர்.
இன்று காலை காரை எடுக்க வந்த டிரைவர் காரின் பின்பக்க சக்கரங்கள் தீயில் எரிந்து போயிருந்ததைத் கண்டார். காருக்கு அடியில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேன் ஒன்று காணப்பட்டது.
இது குறித்து சீமானின் சகோதரர் ரவி, காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தீ சரியாக பரவாததால் கார் முழுவதும் எரியாமல் தப்பியுள்ளது.
காங்கிரசார்தான் அவரது காருக்கு தீ வைத்திருக்கலாம் சீமான் தரப்பினர் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தையடுத்து சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உருவபொம்மை எரிப்பு முயற்சி:
இதற்கிடையே கோடம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் சீமான் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடந்தது. இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து சீமான் உருவ பொம்மையை எரிப்பதற்காக ரோட்டுக்கு எடுத்து வந்தனர்.
போலீசார் அதை எடுக்கவிடாமல் அவர்களிடம் இருந்து பறித்தனர். இதனால் காங்கிரசார் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 25 இளைஞர் காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர்.
உண்ணாவிரத மிரட்டல்:
முன்னதாக, இயக்குனர் சீமான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால் சென்னை டிஜிபி அலுவலகம் முன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவார்கள் அக் கட்சியின் எம்எல்ஏ அருள் அன்பரசு எச்சரிந்தார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையி்ல்,
சீமானை கைது செய்யக் கோரி தமிழக போலீஸ் டிஜிபியிடம் மனு அளிக்க உள்ளோம்.
இந்த மனுவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அதோடு அவர் பிரபாகரனுக்கு தேவையான பொருட் களை இங்கிருந்து அனுப்புவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அத்துடன் கனடாவில் இருந்து அவருக்கு பணம் வருவதாகவும் ஒரு தகவல் உள்ளது. இந்த பணத்தில் அவர் அதிக அளவில் சொத்துக்கள் வாங்கியிருப்பதாகவும், வங்கியில் பணம் டெபாசிட் செய்திருப்பதாகவும் தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.
எனவே சீமானின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அவரது வங்கி கணக்கையும் முடக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருக்கிறோம்.
நாங்கள் கொடுக்கும் மனு மீது காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரசார் ஒன்று திரண்டு டிஜிபி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications