கைதான லஞ்ச பெண் இன்ஸ்பெக்டரால் ஆபத்து-கர்ப்பிணி
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஜீவிதா. கர்ப்பிணியான இவர், தன்னுடைய கணவர் நடத்தையில் சந்தேகப்படுவதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அடையாறு மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதாவிடம் புகார் கொடுத்தார்.
புகாரைப் பெற்ற இன்ஸ்பெக்டர் கீதா, கொஞ்சம் கூட மனசாட்சியோ, இரக்கமோ, பெண் அதிலும் கர்ப்பிணி என்ற ஈரமோ இல்லாமல், நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும். கொடுக்கப் பணம் இல்லாவிட்டால், உன்னுடைய தாலி சரடையாவது கழற்றி கொடு என்று கூறியதாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார் கொடுத்தார் ஜீவிதா. இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் அறிவுரைப்படி கீதாவிடம், ஜீவிதா பணம் கொடுத்தார். அப்போது போலீஸார் கீதாவை வளைத்துப் பிடித்தனர்.
இந்த நிலையில், ஜீவிதா நேற்று தனது பெற்றோருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில்,
நான் ஏழை என்றபோதிலும், கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் இன்ஸ்பெக்டர் கீதா, என்னிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். என்னால் தரமுடியாது என்றேன். அப்படியென்றால், உன் கணவனிடமிருக்கும் உன்னுடைய 5 சவரன் நகையையோ, அல்லது தாலி சரடையோ கொடு என்று கேட்டார். இதனால்தான் நான் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தேன்.
லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் கீதாவை கைது செய்துவிட்டு, உடனடியாக ஜாமீனில் விட்டு விட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது. இதை கேட்டு நானும், எனது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தோம்.
இன்ஸ்பெக்டர் கீதா ஏற்கனவே மிரட்டல் விடுத்துள்ளார். லஞ்சம் கேட்கும் விஷயத்தை வெளியே சொன்னால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் தீர்த்துக் கட்டி விடுவோம் என்று மிரட்டியுள்ளார். இதனால் அவரால் எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஆபத்து உள்ளது.
எனவே, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது கணவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, இன்ஸ்பெக்டர் கீதாவின் சொத்து விவகாரங்களை போலீஸார் தோண்டியெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
லஞ்சம் வாங்கிய பணத்தில் வீடுகள், சொத்துக்கள் வாங்கியிருக்கிறாரா? என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் கீதா கைது செய்யப்பட்டவுடன், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். போலீசார் சோதனை நடத்துவதற்கு முன்பே, வீட்டில் இருந்த ஆவணங்களை எல்லாம் கீதா, தனது மகன் மூலம் மறைத்து விட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இதனால் எந்த ஆவணங்களும் போலீசார் கையில் சிக்கவில்லை.
இன்ஸ்பெக்டர் கீதாவின் கணவர் என்ஜினீயராக உள்ளார். கீதாவுக்கு 2 மகன்களும் உள்ளனர். கீதா கைது செய்யப்பட்ட சம்பவமும், கர்ப்பிணியிடம் தாலிச் சரட்டைக் கழற்றிக் கொடு என்று கேட்ட கொடுமையும் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தொடர்பான செய்திகள்:
கர்ப்பிணியிடம் தாலியை லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர்