2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் தொடக்கம்
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தியும், இனப்படுகொலையைத் தடுக்கக் கோரியும் 2 கோடி பேரிடம் கையெழுத்தும் வாங்கும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் டாக்டர் ராமதாஸ், வைகோ, தா.பாண்டியன், திருமாவளவன் ஆகியோர் சென்னையில் நிருபர்களை நேற்று சந்தித்தனர்.
அப்போது இலங்கைத் தமிழர் இனப்படுகொலையைத் தடுக்கவும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
விண்ணப்பத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்iனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதுரையில் செவ்வாய்க்கிழமை இலங்கை தமிழர் காக்க கூட்டம் நடத்த இருக்கிறோம். 2-ந் தேதி தூத்துக்குடியிலும், 3-ந் தேதி திருச்சியிலும் நடத்த இருக்கிறோம்.
வக்கீல்களுக்கு ஆதரவாக நாங்கள் போராட்டம் அறிவித்தோம். இந்த போராட்டத்திற்கு முதலில் அனுமதி கொடுத்த போலீசார் அதன் பிறகு என்ன காரணத்திற்காகவே மறுத்து விட்டனர். எங்கள் போராட்டத்தை முடக்க, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வன்முறையில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டுகளை எங்கள் மீது போட முயல்கின்றனர்.
ஈழத்தமிழர்களுக்காகவும், வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் வகையில் வரும் 27-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். தற்போது உலக நாடுகளின் கவனத்தை திருப்புவதற்காக கையெழுத்து இயக்கம் நடத்த இருக்கிறோம். 2 கோடி பேர்களிடம் கையெழுத்து பெற்று அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்சு ஆகிய நாட்டு தூதுவர்களிடம் ஒப்படைப்போம் என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில்,
போராட்டங்களை நாங்கள் கைவிடவில்லை. ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைக்கும் இதர அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். ஜனநாயக முறைகளை கடைபிடிக்காமல் எங்கள் போராட்டங்களை ஒடுக்க விரும்பினால் நாங்கள் தொடர்ந்து எங்கள் போராட்டத்தை வலுப்படுத்துவோம். அடுத்து கட்ட போராட்டம் குறித்து மதுரையில் கூடி விவாதம் செய்வோம் என்றார்.
தொல்.திருமாவளவன் கூறுகையில், ஐகோர்ட்டில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி தான் முழு பொறுப்பு. அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications