ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை எரித்து போராட்டம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த மோதல் தொடர்பாக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான விசாரணைக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால், இந்த அறிக்கை ஒரு தலைபட்சமாக உள்ளதாகக் கூறி இன்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் நகலை எரித்து வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர்.
அதே போல அரியலூர் நீதிமன்றம் முன்பும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை வழக்கறிஞர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
அதே போல தமிழகத்தின் வேறு சில இடங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோரின் உருவப் படங்களும் எரிக்கப்பட்டுள்ளன.
வீரமணி கண்டனம்:
இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இப்போது நடைபெறும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் அரசியல் நுழைந்து விட்டது என்று அச்சம் பொதுவானவர்களுக்கு இருக்கிறது. அதைப் போக்க வேண்டிய கடமை வழக்கறிஞர் சகோதரர்களுக்கு உண்டு என்று நேற்றும் நாம் விடுத்த அறிக்கை நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பதை இப்போது நடந்துள்ள சம்பவங்கள் நிரூபித்துள்ளன.
ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை எரிப்பதைக் கூட, அவர்கள் அதிருப்தியைக் காட்ட செய்தனர் என்று ஒரு சமாதானம் சிலர் கூறலாம்.
ஆனால், முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் உருவப்படங்களை அங்கே எரிக்க வேண்டிய அவசியம் என்ன? எந்தவிதத்தில் அவ்விரு தலைவர்கள் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைக்குப் பொறுப்பாவார்கள்?
தங்கள் போராட்டத்துக்கு காவல்துறை வரக்கூடாது என்று கூறிவிட்டு இப்படி நடந்துள்ளது. இது அப்பட்டமான அரசியல். திமுக-காங்கிரஸ் வழக்குரைஞர்களே, இதற்குப் பிறகும் உங்கள் கடமை என்ன? இது கண்டு ஆத்திரம் வர வேண்டாமா? வழக்கம்போல் கோஷ்டி கானம் பாடுவதுதானா?.
நீங்கள் இந்த 'அரசியல் நடத்துவோருடன்' இல்லை என்று காட்டிட நீதிமன்றப் புறக்கணிப்பை கைவிட்டு விட்டு வழக்குரைஞர்களுக்குரிய கடமைகளை பணிகளைச் செய்வதோடு, இதற்கு அறவழியில் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டாமா?.
இது பற்றி திராவிடர் கழக வழக்குரைஞர்களின் அவசரக் கூட்டம் நாளை எனது தலைமையில் பெரியார் திடலில் நடைபெறும்போது இதற்கென சில முடிவுகளை மேற்கொள்வோம். திமுக, காங்கிரஸ் வழக்குரைஞர்களே, உங்கள் கட்சித் தலைவர்கள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இழிவுபடுத்தப்படுவதை எப்படி பொறுத்துக் கொண்டிருக்கலாம்?.
முதல்வர் கருணாநிதி நீதிமன்றங்களுக்கு இதுவரை இல்லா அளவுக்கு ரூ.200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி, பற்பல ஊர்களில் புதிய புதிய கட்டங்களைக் கட்டித் திறந்து, பல வழக்குரைஞர்களுக்கு தொழிலகம் பெருக வசதி செய்து கொடுத்தவர். அதற்கு வழக்குரைஞர்கள் காட்டும் நன்றியா இது, வேதனை, வேதனை.
வழக்குரைஞர்களே, பொதுமக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். பொது ஒழுக்கச் சிதைவு எவ்வளவு காலம் நீடிப்பது? என்று கூறியுள்ளார் வீரமணி.