ஐபிஎல் மறு அட்டவணை-உள்துறை மீண்டும் நிராகரிப்பு
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 2வது ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை மீண்டும் மாற்றுமாறு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு ஏப்ரல் 16ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஐபிஎல் 2வது போட்டித் தொடர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடைபெறும் சமயம் போட்டிகள் நடப்பது சரியாக இருக்காது, தீவிரவாதத் தாக்குதலை எதிர்பார்ப்பதால் போட்டியை ரத்து செய்ய வேண்டும் அல்லது மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் ஐபிஎல் அமைப்புக்கு உத்தரவி்ட்டது.
ஏப்ரல் 10-ம் தேதி முதல் மே 24 ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. லாகூரில் நடந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலும் குறுக்கிட்டதால், போட்டி அட்டவணையை மாற்ற ஐபிஎல் முடிவு செய்து அதன்படி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றி புதிய அட்டவணையை உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
கடந்த 7-ம் தேதி புதிய அட்டவணையை உள்துறை அமைச்சகத்திடம், ஐ.பி.எல். சமர்பித்தது. அந்தப் பட்டியல் போட்டி நடக்கும் சம்பந்தப்பட்ட 8 மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் தமிழக அரசு, ஐ.பி.எல். அட்டவணையை நிராகரித்து விட்டது.
சென்னையில் நடத்த திட்டமிடப்பட்ட 9 ஆட்டங்களில் தேர்தலுக்கு பிறகு நடக்கும் 4 ஆட்டங்களுக்கு மட்டுமே தங்களால் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று தமிழக காவல்துறை பதில் அனுப்பி விட்டது.
இந்த நிலையில் தமிழகம் தவிர மற்ற 7 மாநில அரசு உயர் அதிகாரிகளிடம், மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தா நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடந்தது.
அப்போது பெரும்பாலான மாநிலங்கள், போட்டி அட்டவணை குறித்து அதிருப்தி தெரிவித்தன. தேர்தலும் வருவதால் சில ஆட்டங்களுக்கு தங்களால் பாதுகாப்பு அளிக்க இயலாது என்று தெரிவித்தன.
கர்நாடக அரசு, பெங்களூரில் நடக்கும் 6 ஆட்டங்களில் 2 ஆட்டத்திற்கு பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்று தெரிவித்தது. மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் உள்துறை அமைச்சகம் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரை விடுவித்தால் மட்டுமே பாதுகாப்பு அளிக்க முடியும் என்று கூறியது.
அத்துடன் தங்களுக்கு 30-க்கும் மேற்பட்ட துணை ராணுவ கம்பெனி தேவை என்று மேற்கு வங்காள அரசும், 10 மற்றும் 5 கம்பெனி துணை ராணுவம் தங்களுக்கு தேவை என்று பஞ்சாப் மற்றும் சண்டிகர் நிர்வாகமும் கேட்டன. ஆனால் அவர்களின் கோரிக்கையை உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டது.
இப்படி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு தருவதில் தயக்கம் காட்டப்பட்டதால், அட்டவணையை மீண்டும் மாற்றி அமைக்குமாறு உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 7-ந்தேதி சமர்ப்பிக்கப்பட்ட ஐ.பி.எல். அட்டவணைப்படி போட்டிகளை நடத்த வாய்ப்பில்லை என்று ஐ.பி.எல். அமைப்பாளர்களை அறிவுறுத்தி இருக்கிறோம். தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு மாநில அரசுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
இவற்றை கருத்தில் கொண்டு மீண்டும் போட்டி அட்டவணையை மாற்றி புதிய அட்டவணையை சமர்ப்பிக்கும்படி ஐ.பி.எல். அமைப்பாளர்களை அறிவுறுத்தி உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.