19 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு; ரூ. 400 முதல் ரூ.4000 வரை கூடுதல் சம்பளம்
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 19 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.
தமிழ்நாட்டில் 13.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். 5.5 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதார்களும் உள்ளனர்.
இப்போது அவர்களது அடிப்படை சம்பளம், ஓய்வூதியத்தில் 54 சதவீதம் அகவிலைப்படி தரப்படுகிறது.
கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
இந்த வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
க்கப்பட்டிருந்தது.
அரசு ஊழியர்கள் பிப்ரவரி சம்பளத்துடன் சேர்த்து அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், நிலுவைத் தொகை தரப்படவில்லை.
இந் நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட 6 சதவீத அகவிலைப்படி உயர்வு, 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.400 முதல் அதிகபட்சம் ரூ.4000 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.
ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
திருத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு அரசு மானியம் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், உள்ளாட்சி மன்றங்களின் அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.), அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) சம்பள விகிதங்களின் கீழ் வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள்,
வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறையில் பணிபுரியும் ஊராட்சி உதவியாளர்கள், கிளார்க்குகள் ஆகியோருக்கு பொருந்தும்.
பகுதி நேர அலுவலர்களுக்கு இது பொருந்தாது.
அதே நேரத்தில் ஓய்வூதியதாரர்களுக்கும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வருக்கு நன்றி:
இந்த அகவிலைப்படி உயர்வுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், சென்னை மாநகராட்சி இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் ஆகியவை முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளன.
இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு:
இந்த அகவிலைப்படி உயர்வு தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாணது என்று இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில்குமார் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு புகார் அனுப்பியுள்ளார்.