தொழில் நிறுவனங்களுக்கான மின்வெட்டு தளர்த்தப்படும்-ஆற்காடு
சென்னை: மே 10ம் தேதி முதல் தொழில் நிறுவனங்களுக்கு தினசரி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அமல்படுத்தப்பட்டு வந்த மின்வெட்டு நீக்கப்படும் என மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
உயர் அழுத்த, குறைந்த அழுத்த மின்சாரத்தை இந்த நேரங்களில் பயன்படுத்துவதற்கு தொழில் நிறுவனங்களுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத்தான் நீக்கப் போவதாக அறிவித்துள்ளார் வீராசாமி.
கடும் மின் பற்றாக்குறை, பெரும் விலை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கியது, மத்திய அரசு உரிய மின்சாரத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்தது போன்ற பல்வேறு காரணங்களையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழகத்தில் பல ஷிப்டுகளாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கடும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். ஆனால் அவர்களை விட மிகக் கடுமையான இழப்புகளை சந்தித்தவை தொழில்துறையும், வர்த்தகத் துறையும்தான்.
இந்த நிலையில் காற்றாலை மூலம் அதிக அளவிலான மின்சாரம் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகியிருப்பதால் உற்பத்தி - தேவை ஆகியவற்றுக்கான இடைவெளி வெகுவாக குறையும் என ஆற்காடு வீராசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒரு வேளை அது சரி வராவிட்டால் அரசு மின்சாரத்தை வாங்கி விநியோகிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை அருகே படப்பையில், அரீவா இந்தியா நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு தொடக்க விழாவில் கலந்து கொண்டபோது இவ்வாறு தெரிவித்தார் ஆற்காடு வீராசாமி.
வரும் மாதங்களில் தமிழகத்தில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 1800 மெகாவாட் ஆக உயரும் என தகவல்கள் கூறுகின்ரன. மே மாதம் முதல் காற்றாலை மின் உற்பத்தி வேகம் பிடிக்கும்.
இந்த காலகட்டத்தில், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், காலை ஆறரை மணி அளவிலும் காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால், மின் உற்பத்தியும் அதிகரிக்கும். இதை சரியாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் மின் தட்டுப்பாட்டை சரி செய்ய முடியும் என தமிழ்நாடு மின்சார வாரியம் கருதுகிறது.
வரும் தேர்தலில் மின்சாரப் பற்றாக்குறையும், மின்வெட்டும் ஒரு பிரச்சினையாக இருக்கும் என கருதப்படுகிறது. திமுக தேர்தலில் தோற்றால் அதற்கு மின்சாரப் பிரச்சினைதான் காரணமாக இருக்கும் என சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு வீராசாமியே கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் மின்வெட்டை சரி செய்ய அரசு வேகம் வேகமாக நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக கருதப்படுகிறது.