தென்காசி தேமுதிக வேட்பாளரான சினிமா கேமராமேன்
இன்பராஜின் தகப்பனார் பெயர் க. கருப்பசாமி, தாயார் பெயர் க.இசக்கியம்மாள். மனைவி கஸ்தூரி. இந்தத் தம்பதிக்கு சுதீஷ் ராஜ் என்ற மகன் உள்ளான்.
1-126 தெற்கு தெரு, அச்சம்பட்டி, மங்களாபுரம் போஸ்ட்-627 751, தென்காசி தாலுகாவில் வசித்து வரும் இன்பராஜ், கூட்டுறவு நிர்வாகத்தில் பட்டயப் படிப்பு படித்தவர். ஐடிஐயில் கம்ப்யூட்டர் டிப்ளமோ முடித்துள்ளார். விவசாயத் தொழில் செய்து வருகிறார்.
ஆனால் முன்பு சினிமாவில் துணை கேமராமேனாக இருந்துள்ளார். சத்யன், கவுசல்யா இணைந்து நடித்த இளையவலன் படத்தின் துணை கேமராமேனாக இருந்துள்ளார்.
தற்போது கட்சியில் வகிக்கும் பதவி - கடையநல்லூர் ஓன்றிய கழக இளைஞரணி செயலாளர்.
தற்போது வகிக்கும் உள்ளாட்சி பதவி - கடையநல்லூர் ஓன்றியம் புதுக்குடி பஞ்சாயத்து துணை தலைவர்
தான் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றால் இதையெல்லாம் செய்வேன் என்று பெரிய பட்டியலே போடுகிறார் இன்பராஜ் ..
1. தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வரும் தென்காசி ரயில்வே மேம்பாலம் உடனே கட்டி முடித்திட ஏற்பாடு செய்யப்படும்.
2. தென்காசியை மையமாக வைத்து அரசு பொறியியல், மருத்துவம், கலைக்கல்லூரிகள் அமைத்திட பாடுபடுவேன்.
3. குண்டாறு, மோட்டை அணைக்கட்டுகள் கடந்த 1998 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறவாளி காற்று மற்றும் கடும் மழையால் பாதி மூடப்பட்ட நிலையில் உள்ளது. அதனை தூர் வாரப்பட்டு ஆலங்குளம் வரையிலும் விவசாய தேவைக்காக குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடவும் ஏற்பாடு செய்யப்படும்.
4. மேக்கரை அடவிநயினார் அணைக்கட்டு மேலும் ஆழப்படுத்தப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை விரிவுபடுத்தவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தென்காசி, பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் தங்குதடையின்றி கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
5. கடையநல்லூர் பகுதியில் 80 சதவீதம் பேர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள வீடியோ கான்பிரசன்சிங் வசதியை மத்திய தகவல் தொழில்நுடப் துறை உதவியுடன் நிறுவிட முயற்சிகள் செய்யப்படும். இதனால் 50 சதவிதம் மேல் அப்பகுதி மக்களுக்கு வெளிநாட்டு தொடர்பு கொள்ளும் கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது.
6. வாசுதேவநல்லூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட சிவகிரி கோம்பை ஆறு அணைக்கட்டு திட்டம், வாசுதேவநல்லூர் தலையாணை நீர்தேக்க திட்டம், புளியங்குடி வானமலையாறு அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றிட பாடுபடுவேன்.
7. புளியங்குடி மற்றும் சுற்று வட்டார கிராம மக்களின் விவசாய தொழிலில் பெரும் பங்கு வகிக்கும் எலுமிச்சை பழங்களை அரசு கொள்முதல் செய்திடவும் ஆண்டு முழுவதும் சீரான விலை கிடைத்திடவும் அதனுடன் எலுமிச்சை சாறு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
8. சங்கரன்கோவில் பகுதியில் தொழிற்சாலைகள் அமைத்திடவும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு அரசு பயிற்சி அளித்திடவும், ஓய்வூதிய திட்டம் மற்றும் குடும்ப நல திட்டம் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
9. அதே போல் ஸ்பின்னிங் மில் டெக்ஸ்டைல் மில்கலில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு அரசு மூலம் பயிற்சி மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
10. தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி பகுதிகளை மையமாக கொண்டு சென்னை மற்றும் நாங்குநேரியில் அமைந்துள்ளது போல் டைடல்பார்க் அமைத்து தென்மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
11. இடைகால் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் (அச்சன்புதூர், சிவராமபேட்டை, இலத்தூர், ஆய்க்குடி, சாம்பவர் வடகரை, ஊர்மேல்ஆழகியான், பொய்கை) மக்கள் பயன்பெறும் வகையில் இடைகாலில் ரயில்வே நிலையம் அமைத்திட பாடுபடுவேன்.
12. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் நிறுவிடவும், அதில் ஆயிரக்கனக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றிடவும் மத்திய ஜவுளி துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் இன்பராஜ்.