யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு மீண்டும் மவுசு!
சில ஆண்டுகளுக்கு முன்புவரை யுபிஎஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணைக் குழுமம் நடத்தும் தேர்வுகளுக்கு ஏக கிராக்கி. பெரும்பாலான இளைஞர்கள் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் பத்திரிகையும் கையுமாகவே காட்சி தந்தனர்.
திடீரென்று ஐடி துறையில் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் பெருமளவு சம்பளம் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. இதனால் சாதாரண கலைப் பட்டம் பெற்ற மாணவர்களும் பெரும் தொகை செலவழித்து கம்ப்யூட்டர் படிப்புகள் கற்று ஐடி நிறுவனங்களில் கிடைத்த வேலையில், கால் சென்டர்களில் சேர்ந்தனர். வெளிநாடுகளுக்கும் பறந்தனர்.
அதே போல வங்கித்துறைப் பணிகளுக்கும் மவுசு குறைந்து விண்ணப்பிப்போர் எண்ணிக்கையே 60 சதவிகிதம் வரை குறைந்து போனது.
இந்த சூழலில், இப்போது பொருளாதார மந்தம் காரணமாக கிட்டத்தட்ட ஐடி துறையே முடக்கப்பட்டுள்ள நிலை. வரும் ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஐடி துறையில் மட்டுமே பதவி இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது.
இந்த உண்மைகள் புரிந்ததால், இப்போது மீண்டும் அரசு வேலைகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கு மவுசு கூடியுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் 42 சதவிகிதம் கூடுதல் விண்ணப்பங்கள் குவிந்துள்ளனவாம். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட முதல்நிலைத் தேர்வுகளுக்கு கடந்த ஆண்டைவிட இருமடங்கு விண்ணப்பங்கள் இந்த ஆண்டு வந்துள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. வருகிற மே 17-ம் சிவில் சர்வீஸ் பிரிலிமினரி தேர்வுகள் நடக்க உள்ளன.
இதைவிட முக்கியம், இந்த சீசனைப் பயன்படுத்தி பணம் குவிக்கும் தேர்வுப் பயிற்சி மையங்கள்தான். சமீபத்தில் புதிது புதிதாக நிறைய பயிற்சி மையங்களை, ஏற்கெனவே தேர்வெழுதித் தோற்ற அனுபவசாலிகள் துவங்கியுள்ளனராம். இம்மையங்களில் ஏராளமான மாணவர்கள் குறுகிய காலப் பயிற்சிக்காக சேர்ந்து வருகின்றனர். சில மையங்களில் இதற்கு கட்டணமாக நபருக்கு ரூ.25 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறதாம்.
அதேநேரம் பல காலமாக இப்பயிற்சிகளை அளித்துவரும் புகழ்பெற்ற பயிற்சி மையங்களும், தற்போது நிறைய பேர் ஐடி துறைப் பணிகளை மறுத்துவிட்டு, அரசுப் பணிகளில் சேர தங்களது பயிற்சி மையத்துக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளன. இதற்குக் காரணம், ஆறாவது நிதிக் குழுவின் பரிந்துரைகளால் அதிகரித்துள்ள சம்பளமும் கூட என அவை கூறியுள்ளன.