சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அதிமுக பரிசு!
மதுரை: மதுரையில் இன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் பொறித்த பரிசுப் பொருட்களை வழங்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் பார்வையாளரிடம் திமுக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.
மதுரை தொகுதி திமுக தேர்தல் பணிக்குத் தலைவரான பொன். முத்துராமலிங்கம் தலைமையில் திமுக குழுவினர் நேற்று மதுரை தொகுதி சிறப்பு தேர்தல் பார்வையாளர், மதன கோபாலிடம் ஒரு மனு அளித்தனர்.
அதில், மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை (இன்று) நடக்கிறது. இதற்காக ஏராளமான பக்தர்கள் மதுரையில் குவிந்து உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அ.தி.மு.க.வினர் பரிசு வழங்கி தங்களது கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கு ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சின்னம் பொறித்த பரிசு பொருள்களை தயார் நிலையில் வைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தேர்தல் விதிமுறையை மீறும் செயலாகும். எனவே பக்தர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
நாகை திமுக வேட்பாளர் மனைவி மீது புகார்:
இந் நிலையில் நாகை மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு வேட்டி, புடவை, பணம் போன்றவற்றை வழங்கிய திமுக வேட்பாளரின் மனைவி மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செய லாளர் சி.மகேந்திரன், அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.காமராஜ், சிபிஐ மாவட்ட செயலாளர் வெ. வீரசேனன், சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் இரா.முத்தரசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழகத்தில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் வாக்காளர்களைக் கவர இலவச வேட்டி, சேலைகளை வழங்குவது, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பணம் வழங்குவது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகவும் வெட்கக்கேடானது.
மதுரையில் பூட்டிய வீட்டிற்குள் கூட 500 ரூபாய் நோட்டுகளை வீசி எறிவ தாக தகவல்கள் வருகிறது. ப.சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் இளையான்குடி தெற்கு சாலை கிராமத்தில் பணம் கொடுக்க வந்தவர்களை மக்கள் பிடித்துக் போலீசாரிடம் கொடுத்துள்ளனர். திருமங்கலம் பாணியில் ஜனநாயகத்தை விலைபேச முயன்று வருகின்றனர்.
நாகை தொகுதியில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தயமார்த்தாண்டபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திமுக வேட்பாளர் விஜயனின் மனைவி ஜோதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு ஊக்குனர் ராஜேஸ்வரி ஆகியோர் வாக்காளர்களுக்கு இலவசமாக வேஷ்டி, சேலை வழங்க உள்ளதை தெரிந்து பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர். இது குறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுகக்ப்பட்டுள்ளது.
அரசு எந்திரம் இதுவரை இல்லாத அளவிற்கு துஷ்பிரயோகம் செய்யப்படு வருகின்றது என்றனர்.












Click it and Unblock the Notifications