சிதம்பரம் வருகை எதிரொலி - காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் தள்ளிவைப்பு
சென்னை: தமிழகத்தில் ஆட்சியில் பங்கேற்பது குறித்து இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் திடீரென தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
இந்த தள்ளிவைப்புக்குக் காரணம் கோஷ்டிப் பூசல்தான் காரணம் என்று கூறப்படுகிறு.
இன்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அவரது ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனில் பிரமாண்ட வரவேற்பு தருகின்றனர். இந்த நேரத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை வைத்தால் அது பல்வேறு கோஷ்டிகளுக்கிடையிலான பெரும் மோதலுக்கு வழி வகுத்து விடும் என்பதால் கூட்டம் தள்ளி வைக்கப்படட்டு விட்டதாம்.
வட மாநிலங்களில் எதிர்பாராத வகையில், கணிசமான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் தற்போது தென் மாநிலங்களிலும் தனது பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைளில் ராகுல் காந்தி தீவிரமாக உள்ளார்.
தமிழகத்தை அவர் முன்னுரிமைப் பட்டியலில் வைத்துள்ளார். தமிழக ஆட்சியில் பஙகு கேட்பது, அதன் மூலம் கிடைக்கும் அமைச்சர் பதவிகளை வைத்து காங்கிரஸ் கட்சிக்கும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை ஈட்டுவது, அதை வைத்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது என்ற திட்டத்தில் அவர் உள்ளார்.
ஏற்கனவே ஆட்சியில் பங்கே கேட்டு வரும் தமிழக காங்கிரஸாரை, ராகுலின் திட்டம் ஏகத்திற்கு உற்சாகப்படுத்தியுள்ளது.
விரைவில் சட்டசபை கூடவுள்ளது. இந்த நிலையில், ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் (35 பேர்) தவறாமல் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் காங்கிரஸ் தரப்பில் பெரும் எதிர்பார்ப்பும், திமுக தரப்பில் பரபரப்பும் நிலவியது.
இந்த நிலையில் திடீரென எம்.எல்.ஏக்கள் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
ப.சிதம்பரம் வருகை எதிரொலி..
இன்றைய கூட்டம் தள்ளி வைக்கப்படதற்குக் காரணம் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் பெரும் கோஷ்டி மோதல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம்தான் காரணமாம்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல், கோஷ்டி மோதல் உலகறிந்தது. அங்குள்ள ஒவ்வொரு தலைவரும் ஒரு கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த கோஷ்டிப் பூசலால்தான் சமீபத்திய லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களான தங்கபாலு, இளங்கோவன், மணிசங்கர அய்யர் ஆகியோர் தோல்வி அடையக் காரணம். காங்கிரஸ் கட்சி சரிவைச் சந்திக்கவும் இந்த கோஷ்டிகள்தான் காரணம்.
இருப்பினும் ப.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் மட்டும் கமுக்கமாக வெற்றி பெற்று தப்பி விட்டனர். இருப்பதிலேயே பெரிய கோஷ்டியின் தலைவரான ஜி.கே.வாசன் இதுவரை தேர்தலில் போட்டியிட்டதே இல்லை. அந்த அளவுக்கு தனது கட்சியின் மீது நம்பிக்கை. ராஜ்யசபா எம்.பி.யாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறார். இதனால் அவரும் தோல்விப் பட்டியலில் இதுவரை இடம் பெறவில்லை.
கடந்த 31ம் தேதி ஜி.கே.வாசன் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அவரது வருகையை ஆதரவாளர்கள் தடபுடலாக கொண்டாடி, சிறப்பான வரவேற்பு கொடுத்து அசத்தினர்.
இந்த நிலையில்தான் ப.சிதம்பரம் இன்று சத்தியமூர்த்தி பவன் வருகிறார். வாசன் கோஷ்டியை விட ஒரு படி உயர்வான வரவேற்பை சிதம்பரத்திற்குத் தரத் திட்டமிட்ட அவரது கோஷ்டியினர் சத்தியமூர்த்தி பவன் வளாகத்திற்குள் பிரமாண்ட மேடை அமைத்து அசத்தியுள்ளனர்.
மேலும் வழி நெடுகிலும் ப.சிதம்பரத்தின் பெரிய பெரிய தட்டிள், பேனர்கள், கட் அவுட்கள் என அதகளப்படுத்தியுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை வைத்தால் நிச்சயம் அது ரசாபாசமாகத்தான் முடியும் என்று கருதியே ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்து விட்டது தமிழக காங்கிரஸ் மேலிடம் என்று கூறப்படுகிறது.
ஆக, ஆட்சியில் பங்கு என்ற முக்கியமான பிரச்சினையை விட, கோஷ்டிகளால் அடிதடி ரகளையாகி விடுமோ என்பது மிக முக்கியப் பிரச்சினையாகி விட்டது!












Click it and Unblock the Notifications