3 கள்ள காதலர்களின் டார்ச்சர்-தவிக்கும் பெண் என்ஜீனியர்!
சென்னை: ஒன்றுக்கு மூன்றாக கள்ளக்காதலர்கள் கொடுத்து வரும் தொல்லையால் கணவருடன் நிம்மதியாக குடும்பம் நடத்த முடியாமலும், கள்ளக்காதலர் ஒருவரின் மிரட்டலுக்குப் பயந்து வீட்டிலேயே திருடியும் மெகா சிக்கலில் மாட்டித் தவித்து வரும் பெண் என்ஜீனியரின் குடும்பம் தற்போது போலீஸ் உதவியை நாடியுள்ளது.
இது கலி காலம் அல்ல, கள்ளக்காதல் காலம் என்று கூறி விடலாம். அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் கள்ளக்காதல் கதையாகவே இருக்கிறது. கள்ளக்காதலுக்காக கட்டிய கணவரையும், மனைவியையும் கொலை செய்வது ஒரு பக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு கூட திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திமுக பஞ்சாயத்துத் தலைவரை, அவரது மனைவியே தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டும், பெட்ரோல் ஊற்றியும் உயிருடன் தீவைத்துக் கொன்ற பரிதாபச் சம்பவம் நடந்தது.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் என்ஜீனியர், 3 கள்ளக்காதலர்களிடம் சிக்கி படாதபாடு பட்டு வருகிறார். அவர்களுக்காக தனது சொந்த வீட்டிலேயே நகை, பணத்தைத் திருடியும் வந்துள்ளார் அவர்.
அந்தக் கொடுமைக் கதை இதோ...
கள்ளக்காதலர்களிடம் சிக்கித் தவிக்கும் அந்தப் பெண்ணின் மாமனார் ஒரு தொழிலதிபர். மாமியார் மத்திய அரசில் உயர் அதிகாரியாக பதவி வகிக்கிறார். கணவர் என்ஜீனியர்.
நல்ல குடும்பம், நல்ல பொருளாதார வசதி என சிறப்பான குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர் அந்தப் பெண்.
அந்தப் பெண்ணும் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பெரும் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், என்ஜீனியர் குடும்பத்தில் அடிக்கடி திருட்டு நடந்துள்ளது. நகை, பணம் என எதுவும் நிற்காமல் தொடர்ந்து திருடு போய் வந்தது. இதனால் வீட்டினர் குழப்பமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் கேரள மாந்த்ரீகர் ஒருவரிடம் குறி கேட்டனர். அதற்கு அவர், வீட்டுக்குள்தான் திருடன் இருக்கிறான், விரைவில் வெளி வருவான் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து என்ஜீனியரின் மாமனார் தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடினார். அவர்கள் திட்ட்படி வீட்டுக்குள் டிபன் பாக்ஸ் ஒன்றில் ரூ. 5000 பணத்தைப் போட்டு வைத்தார் மாமனார்.
2 நாட்களில் அந்தப் பணம் திருடு போனது. இதையடுத்து அந்த டிபான் பாக்ஸை அப்படியே கொண்டு போய் துப்பறியும் நிறுவனத்திடம் ஒப்படைத்தார் மாமனார். அவர்கள் அதில் படிந்திருந்த கைரேகையை ஆய்வு செய்து பார்த்தனர். வீட்டில் உள்ளவர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.
அதில், கள்ளக்காதலில் சிக்கித் தவிக்கும் பெண் என்ஜீனியர்தான் பணத்தைத் திருடியது தெரிய வந்து அனைவரும் அதிர்ந்து போயினர். இந்தப் பணம் மட்டுமல்லாமல் இதற்கு முன்பு காணாமல் போன பணம், நகை எல்லாவற்றையும் அந்தப் பெண் என்ஜீனியர்தான் திருடியுள்ளார்.
ஏன் இப்படி செய்தாய் என்று அவரது மாமனார் கேட்டபோது பெண் என்ஜீனியர் பதில் ஏதும் சொல்லவில்லை. இருப்பினும் விடாமல் அவரது செல்போனைப் பறித்து அதை சோதனையிட்டனர். அப்போது ஏராளமான எஸ்.எம்.எஸ்கள் அதில் இருந்தன.
அதில் பெங்களூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ்ஸைப் பார்த்து திடுக்கிட்டனர். நமது காதலை வீட்டுக்குச் சொல்லாமல் இருக்க வேண்டுமானால் உடனடியாக ரூ. 1 லட்சம் பணத்தை அனுப்ப வேண்டும் என அதில் இருந்தது.
அதேபோல வெளிநாட்டிலிருந்து ஒருவர் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார். அவர் குறித்து அந்தப் பெண் என்ஜீனியரிடம் கேட்டபோது அவர் கூறிய தகவல் படு மோசமாக இருந்தது.
அந்த வெளிநாட்டு நபர், தினசரி பெண் என்ஜீனியரை வெப் காம் மூலம் ஆபாச கோலத்தில் பார்த்து ரசிப்பாராம்.
இதற்காக பெருமளவில் பணத்தையும் அனுப்பி வைத்து வருகிறாராம்.
இவர்கள் போக சென்னையைச் சேர்ந்த கெளதம் என்ற இன்னொரு கள்ளக்காதலனும் இருக்கிறார். இவருக்கு எப்போதெல்லாம் பசிக்கிறதோ அப்போதெல்லாம் பெண் என்ஜீனியர் போக வேண்டுமாம்.
இந்த மூன்று பேரிலும் பெங்களூர் காதலர் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். சென்னை நபர் ஆசைக்கு உடன்படாவிட்டால் கொன்று விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இந்த இருவரையும் சமாளிக்க வெளிநாட்டுக் காதலன் அனுப்பிய பணத்தையும், அது போதாவிட்டால் வீட்டிலிருந்து திருடியும் கொடுத்து சமாளித்து வந்துள்ளார் அந்தப் பெண் என்ஜீனியர்.
3 கள்ளக்காதலர்களிடம் சிக்கித் தவித்து வந்த அவர் எப்படி மீளுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாக தனது கணவருடன் கடந்த ஒருவருடமாகவே இவர் சேரவே இல்லையாம்.
இந்தத் தகவல்கள் தெரிய வந்ததும் பெண் என்ஜீனியரின் மாமனார் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பெண் என்ஜீனியரின் பெற்றோரை வரவழைத்து அத்தனையையும் கூறினர். அவர்களும் பேரதிர்ச்சி.
இந்தப் பிரச்சினையை போலீஸுக்குக் கொண்டு சென்றால் இரு குடும்பத்துக்கும் அசிங்கம். பேசாமல் விவாகரத்து செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
முதலில் இதற்கு ஒத்துக் கொண்ட பெண் வீட்டார் பின்னர் மறுத்து விட்டனர். இதையடுத்து போலீஸாரை அணுகினர் பெண் என்ஜீனியரின் மாமனார் குடும்பத்தினர்.
குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கும் மனு செய்தனர்.
ஆனால் பெண் என்ஜீனியர் குடும்பத்துக்கு ஆதரவாக ஒரு போலீஸ் அதிகாரி மூக்கை நுழைத்துள்ளார். இதையடுத்து நேரடியாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை அணுகி புகார் கொடுக்கவுள்ளதாம் என்ஜீனியரின் மாமனார் குடும்பம்.