அது விஸ்கி இல்ல! Perfume Bottle! பார்க்க மதுபாட்டில் மாதிரியே இருந்ததால் கன்பியூஷன்! நிர்மல்குமார்
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் ஆஜராக டெல்லி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது விஜய்யின் பையில் கத்தரிகோலும், ஆதவ்வின் பையில் விலை உயர்ந்த மதுபான பாட்டிலும் இருந்ததாக சொல்லப்படுவது போன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை என தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யிடம் விசாரணை நடத்த 3ஆவது முறையாக சம்மன் வழங்கப்பட்டது. அதன் பேரில் தவெக தலைவர் விஜய் நேற்று டெல்லி சென்றபோது அவருடன் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரும் சென்றனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது, விஜய்யின் பையை சோதனை செய்த போது அதில் ஒரு கத்தரிக்கோல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது எதற்காக என அதிகாரிகள் கேட்ட போது, "மீசை, தாடியை டிரிம் செய்யத்தான்" என விஜய் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
அது போல் ஆதவ் அர்ஜுனாவின் கைப்பையை அதிகாரிகள் சோதித்ததாகவும், அப்போது அதில் மதுபாட்டில் இருந்ததால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் பரவின. அப்போது மது பாட்டில் எதற்காக என கேட்ட போது, வேண்டுமானால் இங்கேயே விட்டுவிட்டுச் செல்கிறோம் என தெரிவித்தாராம்.
இந்த சோதனையால் 45 நிமிடங்கள் கழித்தே விஜய் உள்ளிட்டோர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டனர். இந்த சம்பவம் வைரலான நிலையில், விஜய்யையும் அவரது கட்சி நிர்வாகிகளையும் சோசியலில் பலர் கடுமையாக விமர்சித்திருந்தனர். ஒரு சிபிஐ விசாரணைக்கு செல்லும் போது கூட குடிக்காமல் இருக்க முடியாதா என்றெல்லாம் கேள்விகள் வந்து விழுந்தன.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் கூறுகையில், "பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
"ஆதவ் அர்ஜுனா பையில் விஸ்கி பாட்டில் இருந்ததாகக் கூறுவது ஒரு திட்டமிட்ட அவதூறு. உண்மையில், அவர் தனது பையில் வைத்திருந்தது ஒரு விலையுயர்ந்த வாசனை திரவியம் (Perfume Bottle) மட்டுமே. அதன் வடிவம் மதுபாட்டில் போலத் தெரிந்திருக்கலாம். பாதுகாப்பு அதிகாரிகள் அதனைச் சோதித்துவிட்டு அனுமதித்தனர். இதைச் சிலர் தவறாகச் சித்தரித்து அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர் என நிர்மல்குமார் தெரிவித்தார்.
விஜய் டெல்லி சென்றிருந்த நிலையில், அவருடன் சென்ற நிர்வாகிகள் குறித்து இத்தகைய செய்திகள் வெளியாவது தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், இது போன்ற வதந்திகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றும், கட்சியின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்களே இத்தகைய பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications