சத்யபாமா பல்கலை.யில் சூரிய சக்தியில் சமையல்!
சென்னை: சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்களுக்கு முற்றிலும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மதிய உணவு சமைக்கப்படுகிறது.
இதற்காக இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதியின் மொட்டை மாடியில் 1100 சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட சூரிய சக்தி வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு 110 சோலார் கான்சென்ட்ரேட்டார் டிஷ்கள் பொருத்தப்பட்டுள்ளன.
எட்டு அடுக்குகளாக இவை அமைந்துள்ளன. இவற்றின் மூலம் சமையலுக்குத் தேவையான 2.2 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. இந்த மின்சாரத்தைக் கொண்டு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் சாப்பாடு சமைக்கப்படுகிறதாம்.
ஒரு சோலார் கான்சன்ட்ரேட்டார் டிஷ் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 5 கிலோவாட் மின்சாரத்தை சேமிக்க முடியுமாம்.
இந்த சூரிய சக்தி சமையல் அமைப்புக்காக ரூ. 1.2 கோடியை செலவிட்டுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். அகமதாபாத்தைச் சேர்ந்த காதியா சோலார் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனமும், சத்யபாமா பல்கலைக்கழகமும் இணைந்து இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளன.
மத்திய மரபு சாரா எரி சக்தித் துறையும், தமிழக மின் வளர்ச்சி ஏஜென்சியும் இணைந்து ஐம்பது சதவீத மானியத்தை வழங்கியுள்ளன.
சூரிய சக்தி சமையல் மூலம் சமையலரை தூசி தும்பட்டா இல்லாமல் படு சுத்தமாக இருக்கிறதாம். சாப்பாடும் படு ஆரோக்கியமாக இருக்கிறதாம். சூரிய சக்தி மூலம் கிடைக்கும் கூடுதல் மின்சாரத்தை விடுதிக்குத் தேவையான சுடுநீரைத் தயாரிக்க பயன்படுத்திக் கொள்கிறார்களாம்.
இதுகுறித்து சத்யபாமா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜேப்பியார் கூறுகையில், 80களில் நான் சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீரகரற்று வாரியத்தின் தலைவராக இருந்தபோது எனக்கு இந்த யோசனை தோன்றியது. ஆனால் இப்போதுதான் நிறைவேறியுள்ளது.
தற்போது நாங்கள் சமையலுக்காக மாதந்தோறும் ரூ. 7.5 லட்சம் அளவுக்கு காஸ் சிலிண்டர்களுக்காக செலவிடுகிறோம். தற்போது அது பாதியாக குறையும்.
காலை 9.30 மணிக்கு மேல்தான் வெயில் நன்றாக அடிக்கும். அப்போதுதான் மின்சாரத்தைப் பெற முடியும். எனவே பகல் நேரங்களில் கிடைக்கும் மின்சாரத்தை சேமித்து வைத்து அதை காபி, டீ, காலை உணவு, இரவு உணவு ஆகியவற்றை தயாரிக்க பயன்படுத்த வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆராயுமாறு எனது ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையை நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.