பயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக்-அமைச்சர் எச்சரிக்கை
சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் உதவித் தொகையை அரசு அதிகரித்துவிட்ட பின்னரும் அவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்வது சரியல்ல என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
உதவித் தொகையை மேலும் உயர்த்தக் கோரி போராட்டம் பயிற்சி டாக்டர்களின் 7வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் அரசு மருத்துவனைகளில் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந் நிலையில் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பயிற்சி டாக்டர்களுக்கு ரூ.4,500லிருந்து ரூ.6,000, பட்ட மேற்படிப்பு படிப்போருக்கு ரூ.8,500லிருந்து ரூ.13,000 என பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்கு உதவித் தொகையை ரூ.16,000 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
மேலும் மருத்துவ பட்டப்படிப்பு பயிற்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.300, பட்ட மேற்படிப்பு மாணவர்கள்- பட்ட மேற்படிப்பில் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் மாதம் ரூ.600 என கூடுதலாக வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாணவர்களுக்கு வழங்கப்படுவது ஊதியம் அல்ல. அவர்கள் படிக்கும் நேரத்தில் வழங்கப்படும் உதவித் தொகையே ஆகும். உதவித் தொகையை மேலே சொன்ன அளவுக்கு உயர்த்திய பிறகும் போராட்டம் நடத்துகின்றனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் பயிற்சி மாணவர்களுக்கு ரூ.2,000 அளவுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணமாகச் செலுத்தி மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் எம்பிபிஎஸ் படித்து முழுமையாக வெளியே வர சுமார் ரூ.3 லட்சத்தை அரசு செலவிடுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உதவித் தொகையை முதல்வர் கருணாநிதி உயர்த்திக் கொடுத்த பிறகும், ஒரு சிலரின் தூண்டுதல் காரணமாக பயிற்சி டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது சரிதானா என்பதை நாட்டு மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வளவு கூறிய பிறகும் போராட்டத்தை பயிற்சி டாக்டர்கள் தொடர்ந்தால் இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஆய்வின்போது, பயிற்சி மாணவர்களின் நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
அப்போது இவர்களின் போராட்டம் குறித்த நிலை தெரிவிக்கப்படுமேயானால், அது அவர்களது பயிற்சி நிறைவுச் சான்றிதழ் மற்றும் மேற்படிப்புக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தும்.
பயிற்சி டாக்டர்கள் இதை உணர்ந்து தங்களது நலனை முன்னிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.