இந்தியரை தாக்கிய ஆஸி இளைஞருக்கு 4 ஆண்டு சிறை
கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி மெல்போர்ன் நகரில் சுக்ராஜ் சிங் (22) என்ற இந்திய மாணவரை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் வழிமறித்தது.
அக்கும்பலைச் சேர்ந்தவர்கள், சுக்ராஜை இந்தியனா என்று கேட்டு பின்னர் பீர் பாட்டில், கட்டை உள்ளிட்டவற்றால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுக்ராஜ் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 15 நாட்கள் கோமாவில் இருந்து பின்னர் மீண்டார். இருப்பினும் அவருக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டன. வாழ்நாள் முழுவதும் அவர் காயத்துடன் கழிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் தாக்கப்பட்ட இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸக்கேரி ஹூசேன் என்ற இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் நாலரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பமீலா ஜென்கின் தீர்ப்பளித்தார்.
இதில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அவருக்கு பரோலே தரக் கூடாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பை நீதிபதி அறிவித்தபோது, குற்றவாளி ஹூசேன், நகத்தைக் கடித்தபடி இருந்தார். மேலும் நீதிபதி தண்டனையை அறிவித்தபோது கைகளை மெதுவாக தட்டியபடி காணப்பட்டார்.
ஹூசேனின் சொந்த நாடு சோமாலியா ஆகும். இவருக்கு 6 வயதானபோது அவரது குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தனர். ஹூசேனுக்கு ஒரு அண்ணன், உள்ளார். இவருடைய தங்கை சோமாலியாவிலிருந்து குடும்பத்தினர் கென்யாவுக்கு அகதிகளாக சென்றபோது அங்குள்ள முகாமில் இருந்தபோது மலேரியா தாக்கி இறந்து விட்டார்.
சிறு வயது முதலே பசி, பட்டினி, சித்திரவதை உள்ளிட்டவற்றைப் பார்த்தே வளர்ந்துள்ளார் ஹூசேன். இதனால் அவரிடம் முரட்டுத்தனம் குடியேறி விட்டது. பள்ளிப் படிப்பின்போது போதைக்கு அடிமையானார். தினசரி கஞ்சா, அபின் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பின்போது இவற்றைக குறிப்பிட்டு, சோமாலியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்த வந்த ஹூசேன், தன்னைப் போலவே வெளிநாட்டிலிரு்நது வந்து இங்கு படித்த மாணவர்களை இனவெறியுடன் தாக்கியிருப்பது ஏற்றுக் கொள்ளமுடியாத அவமானமாகும் என்று கண்டித்தார்.
ஹூசேன் ஏற்கனவே திருட்டு, போலீஸ் அதிகாரியைத் தாக்கியது, கைது செய்யச் சென்றபோது எதிர்த்தது போன்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹூசேனுடன் சேர்ந்து சுக்ராஜைத் தாக்கியவர்களில் 14 முதல் 17 வயது வரையிலான நான்கு பேருக்கு ஏற்கனவே ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது நபரை 12 மாத இளம் சிறார் கண்காணிப்பு மையத்தில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஒரு இந்தியர் மீது தாக்குதல்:
இந் நிலையில் ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்தியர் தாக்கப்பட்டுள்ளார். எப்பிங் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தாக்கப்பட்ட நபர் 22 வயதாகும் சீக்கியர் ஆவார். அவர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அவர் எரவல்லி என்ற இடத்தில் வசித்து வருகிறார். எப்பிங் ரயில்வே நிலையம் அருகே ஒரு பஸ் ஸ்டாப்பி்ல நேற்று படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் இந்தியரின் டர்பனைக் கழற்றியுள்ளனர். பின்னர் அவரது தலையில் அடித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய கும்பலில் இருந்தவர்களுக்கு 17 முதல் 19 வயதுக்குள் இருக்கும் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலைப் பார்த்த பஸ் டிரைவர் ஒருவரும், பயணியும் அதைத் தடுக்க முயன்றனர். ஆனால் அந்தக் கும்பல் தங்களது தாக்குதலை நடத்தி விட்டு தப்பி விட்டனர்.
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்தியருக்கு வாயில் ரத்தம் கொட்டியுள்ளது. இருப்பினும் பெரிய அளவில் காயம் இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 30 இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.