அமெரிக்காவில் பயங்கரம் - ராணுவ டாக்டர் சரமாரியாக சுட்டு 12 பேர் பலி - 31 பேர் காயம்
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட் ஹூட் என்ற இடத்தில் உள்ள ராணுவ தளத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
சரமாரியாக சுட்ட டாக்டரின் பெயர் மேஜர் மாலிக் ஹசன் எனத் தெரிய வந்துள்ளது. இந்த பயங்கத் தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 31 பேர் காயமடைந்துள்லனர்.
அமெரிக்க ராணுவ தளம் ஒன்றில் நடந்த மிகப் பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவமாக இது கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஹசனும் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் உயிருடன் இருப்பதாகவும், குண்டுக் காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ராணுவ அதிகாரி பாப் கோன் கூறுகையில், ஹசன் மரணமடையும் நிலையில் இல்லை. அவர் காயமடைந்துள்ளார். மொத்தம் நான்கு முறை அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவருடைய நிலை கவலைக்கிடமாகத்தான் உள்ளது. ஆனால் மரணமடையும் நிலையில் இல்லை என்றார்.
ஹசன் 39 வயதாகும் நபர். விர்ஜீனியாவைச் சேர்ந்தவர்.
இந்த சம்பவம் குறித்து அதிபர் ஒபாமா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் பயங்கரமான வன்முறைச் செயலாகும். வெளிநாடுகளில் தீரத்துடன் செயல்பட்டு உயிரிழந்து வரும் அமெரிக்க வீரர்கள் குறித்து நாம் கவலைப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் நமது நாட்டிலேயே தீரமிக்க ராணுவ வீரர்கள் சிலரை இழந்திருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.
அமெரிக்க மண்ணில், அமெரிக்க ராணுவ தளத்திற்குள்ளேயே இவ்வாறு நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.
ஹசன் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பதற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. கடந்த ஜூலை மாதம்தான் வால்டர் ரீட் மருத்துவ மையத்திலிருந்து போர்ட் ரூட் தளத்திற்கு டாக்டர் ஹசன் மாற்றப்பட்டார். அவர் ஒரு மன நல மருத்துவர் ஆவார்.
விரைவில் ஹசனை ஆப்கானிஸ்தான் பணிக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் மேற்கொண்டுள்ள போரையும், ஈராக்கில் அமெரிக்கப் படையினர் போரில் ஈடுபட்டதையும் சக வீரர்கள், டாக்டர்களுடன் ஹசன் கடுமையாக எதிர்த்து வாதிட்டு வந்தாராம்.
ஹசன் வழக்கமாக தொழுகைக்குச் செல்லும் மேரிலான்ட், சில்வர் ஸ்பிரிங் பகுதியில் உள்ள மசூதியின் இமாம் பைசுல் கான் என்பவர் கூறுகையில், ஹசன் விரைவில் திருமணம் செய்யத் திட்டமிட்டு பெண் தேடி வந்தார். இஸ்லாமில் தீவிர நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்டவர். தொழுகைகளுக்கு தவறாமல் வருவார். சில நேரங்களில் சீருடையிலும் கூட தொழுகைக்கு வருவார் என்றார்.
ராணுவத்தினர் மீது ஹசன் இரு பிஸ்டல்களைப் பயன்படுத்தி சுட்டுள்ளார். ஒன்று பாதி ஆட்டோமேட்டிக் ஆகும். ஆனால் இது ராணுவத்தினர் பயன்படுத்துவது போன்ற துப்பாக்கி இல்லை என்று தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு குறித்து, அப்போது பணியில் இல்லாத ராணுவ அதிகாரி ஜெர்ரி ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், இது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. வெளிநாடு என்றால் நாம் எதற்கும் தயாராக இருப்போம். ஆனால் நமது ராணுவ தளத்திற்குள்ளேயே இப்படி ஒரு தாக்குதல் நடக்கும்போது அதை நிச்சயம் நம்மால் சமாளிக்க முடியாது என்றார்.
போர்ட் ஹூட் தளத்தில் உள்ள ராணுவ வீரர்கள் பெரும்பாலும் கையில் ஆயுதங்களுடன் இருக்க மாட்டார்களாம். பயிற்சியின்போது மட்டுமே ஆயுதங்களை வைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மத்திய டெக்சாஸில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தர்கள், காயமடைந்தர்கள் குறித்த அடையாளம் இதுவரை சரிவர தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.