ஆந்திர கவர்னராக நரசிம்மன்: தவறு செய்யவில்லை-திவாரி
இந் நிலையில் ராஜினாமா செய்த அமைச்சர்களில் 9 பேர் டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து உடனே தநி மாநிலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது அவர்களிடம் பேசிய பிரணாப், ராஜினாமா செய்த அனைவரும் அதை வாபஸ் பெற வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு வரும் என்றும் உறுதியளித்தார்.
இந்த அமைச்சர்களும் தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் 11 பேரும் இன்று அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமரையும் சந்திக்கவுள்ளனர்.
மேலும் தெலுங்கானா பகுதியில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது ஆந்திரா போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் சோனியாவிடம் வற்புறுத்தவுள்ளனர்.
கெடு முடிந்தது:
இந் நிலையில் 48 மணி நேரத்தில் தனி தெலுங்கானாவை அறிவிக்காவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி விடுத்த கெடு இன்று காலை முடிவடைந்துவிட்டது.
இதனால் போராட்டம் மேலும் வலுக்கும் என்ற பீதி தெலுங்கானா பகுதியில் பரவியுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களையும், பெட்ரோல் உள்ளிட்டவற்றையும் வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையே தெலுங்கானா தனி மாநில போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்கியுள்ளனர். இந்தக் குழுவின் கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது.
அதில் வரும் 2ம் தேதிக்குள் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்க வேண்டும். இல்லையெனில் ஜனவரி 3ம தேதி ஹைதராபாத் நகரை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.
'சலோ ஹைதராபாத்' என்ற பெயரில் இந்த போராட்டத்தை நடத்த மாணவர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த போராட்டத்தில் 10 மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் அணி, அணியாக வந்து கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் மத்திய, மாநில அரசுகள் கலக்கம் அடைந்துள்ளன. 3ம் தேதி மிகப்பெரிய வன்முறை வெறியாட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக பீதி பரவியுள்ளது.
ஹைதராபாத் நகரில் வரும் நாட்களில் எந்த நேரத்திலும் மீண்டும் கலவரம் வெடிக்கும் என்ற பீதி மக்களிடம் நிலவுகிறது.
இதையடுத்து மாணவர்களின் பேரணிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதற்கிடையே ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம், தனது கல்லூரி விடுதிகளை காலவரையின்றி மூடுவதாக அறிவித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் யாரும் இருக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
8 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்ப்பு:
இந் நிலையில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் 8 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானதால் அவர்கள் போலீசாரால் வலுக்கட்டாயமாக மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர கவர்னராக நரசிம்மன் பதவியேற்பு:
இந் நிலையில் ஆந்திரா மாநில கவர்னராக இருந்த என்.டி.திவாரி, பெண்களுடன் லீலையில் ஈடுபட்டு ராஜினாமா செய்து பிடிபட்டு பதவி விலகியதால் அந்தப் பொறுப்பு சட்டீஸ்கர் மாநில கவர்னர் நரசிம்மனுக்கு கூடுதலாக பொறுப்பாக வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை அவர் ஆந்திர மாநில கவர்னர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் தேவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஓசையின்றி வெளியேறிய திவாரி:
இந் நிலையில் செக்ஸ் குற்றச்சாட்டுடன் பதவியை விட்டு தூக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரி நேற்றே ஆந்திராவில் இருந்து ஓசையின்றி வெளியேறினார்.
கவர்னர் மாளிகையில் இருந்து தனியாக வெளியேறிய அவரை ஆந்திர முதல்வவர் ரோசய்யா, தலைமைச் செயலாளர் ராம்சந்த் ரெட்டி ஆகியோர் மட்டுமே மரியாதை நிமி்த்தமாக சந்தித்துப் பேசினர்.
அவருக்கு வழியனுப்பு விழா ஏதும் நடத்தப்படவில்லை.
கண் கலங்கியபடி அவர் புறப்பட்டு சென்றதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
தவறு செய்யவில்லை-திவாரி:
இந் நிலையில் இன்று டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசிய திவாரி, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் தன் மீது கூறப்படும் புகார்கள் தவறானவை என்றும் கூறியுள்ளார்.