காங்.கின் பரிணாம வளர்ச்சி; வாசன் கோஷ்டிக்குள் கோஷ்டி மோதல்!
ஒரு தலைவருக்கு ஒரு கோஷ்டி என்பது காங்கிரஸின் வழக்கமான கலாச்சாரம். ஆனால் தற்போது ஒரு கோஷ்டிக்குள் பல கோஷ்டிகள் என்ற புதிய கலாச்சாரத்தைப் படைக்க ஆரம்பித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் ஜி.கே.வாசனுக்கு இன்று 45வது பிறந்த நாள். இதையொட்டி சென்னையில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் வாசனுக்கு வாழ்த்துக் கூறினார்களாம். மற்றும் மாநில தலைவர் தங்கபாலு உள்ளிட்ட ஏகப்பட்ட தலைவர்கள் போனிலும், வாழ்த்துத் தந்திகள் மூலமாகவும் வாசனை வாழ்த்தினார்களாம்.
வாசனின் பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டிசேலை, ஆலயங்களில் வழிபாடு, சர்வமத பிரார்த்தனை, அன்னதானம், ஆதரவற்றோர் இல்லங்களில் நலஉதவி திட்டங்கள் ஆகியவற்றை அவரது தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
சிதம்பரத்தில் கிளை விட்ட கோஷ்டி...
இந்த நிலையில், சிதம்பரத்தில் வாசன் கோஷ்டி இரண்டாகப் பிரிந்து தலைவர் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிதம்பரம் நகர மகளிர் அணி சார்பில் ஜி.கே.வாசனின் பிறந்தநாள் விழா மாநில பொதுக்குழு உறுப்பினர் மீனாம்பிகா ராமலிங்கம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இவ்விழாவில் நகர தலைவர் வழக்கறிஞர் வேல்முருகன், மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை மக்கின், ஜெமினி ராதா, மாவட்டச் செயலாளர் எஸ்.கே. வைத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்த விழா நடைபெற்ற இடத்திற்கு மிக அருகிலேயே மேலவீதி திரை மீட்ட விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகில் வாசனின் ஆதரவாளர்கள் சேவாதள தலைவர் சரவணகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா, சோனியாவின் 65 வயது தின விழா, ஜி.கே.வாசனின் 45வது பிறந்த தினவிழா என முப்பெரும் விழாவாக் கொண்டாடினார்கள்.
விழாவில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏழை, எளியோருக்கு நல உதவிகளும் வழங்கப்பட்டது.
இரு கோஷ்டிகளும் யார் சவுண்டு பெரிதாக கேட்கிறது என்ற போட்டியில், ஒலிபெருக்கியை சத்தமாக வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் பேசியுள்ளனர். இதனால் வெறும் சத்தம்தான் கேட்டதே தவிர அவர்கள் பேசியது (என்னத்தப் பேசியிருக்கப் போகிறார்கள்) யாருக்குமே சரிவர கேட்கவில்லை.
ஏற்கனவே ஏகப்பட்ட கோஷ்டிகளாக காங்கிரஸ் சிதறிக் கிடக்கும் நிலையில் இப்படி கோஷ்டிக்குள் பல கோஷ்டிகள் என்று காங்கிரஸில் புதிய பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருப்பது மக்களிடையே காங்கிரஸ் கட்சி குறித்த மதிப்பை மேலும் பல படி குறைக்கும் விதமாக உள்ளது.
அதை விட முக்கியமாக மக்களுக்கான போராட்டங்கள் எதிலும் பங்கேற்காமல் கோஷ்டித் தலைவர்கள் ஆங்காங்கே கூடி பிறந்த நாள் விழாக்களை நடத்தி கும்மி மட்டும் அடித்துக் கொண்டிருப்பதும் மக்களை வெறுப்படைய வைத்தது.
சமீபத்தில் ப.சிதம்பரம் மகன் கார்த்தியின் ஆதரவாளர்கள், கார்த்தியின் பிறந்த நாளை மகா ஆடம்பரமாக கொண்டாடினர். பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்கள், தட்டிகள், டிஜிட்டல் பேனர்கள் என தடபுடல் படுத்தினர்.
அதேபோல இன்னொரு கோஷ்டித் தலைவரான ஈவிகேஎஸ்
இளங்கோவனின் பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்து கொண்டாடி குஷியடைந்தனர்.
இப்போது கோஷ்டிகளிலேயே பெரிய கோஷ்டியான வாசன் கோஷ்டியினர் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து குதூகலமாக பிறந்த நாளை கொண்டாடியிருப்பது காங்கிரஸ் கட்சியைப் பார்த்து மக்கள் சிரிக்கும் நிலைக்குக் கொண்டு போயுள்ளது.