பொறியியல் ரேங்க் பட்டியல் வெளியீடு-திருப்பூர் மாணவர் முதலிடம்
சென்னை: பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் மாணவர் நந்துகுமார் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
2011ம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.
இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்புகளில் சேர 1.67 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இன்று வெளியிடபப்ட்ட ரேங்க் பட்டியலில் 3 மாணவிகளும் 7 மாணவர்களும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த மாணவர் நந்தகுமார் முதலிடம் பிடித்துள்ளார்.
தர வரிசை குறித்து தெரிந்து கொள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu இணையதளத்தில் போய் தெரிந்து கொள்ளலாம்.
பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் வருகிற 28ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 5ம்தேதி வரை இது தொடரும்.
அங்கீகாரம் இல்லாத 250க்கும் மேற்பட்ட கல்லூரிகள்:
இந் நிலையில் 250க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற போதிலும் அது பொறியியல் சேர்க்கையில் மாணவர்களை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 454 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,08,025 உள்ளன.
இந் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் ஏ.ஐ.சி.டி.இ. புதிய விதிமுறையை கொண்டு வந்தது.
கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு வசதி உள்ளிட்ட அனைத்தையும் இணையத்தளத்தில் வெளியிட்டு மாணவர் சேர்க்கைக்கான அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்பது உள்பட பல புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது. இதை தமிழ்நாட்டில் பெரும்பாலான தனியார் கல்லூரிகள் ஏற்கவில்லை. ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தன.
இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வருட மாணவர் சேர்க்கைக்கு இன்னும் 250க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி வழங்கவில்லை. ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி வழங்கினால்தான் அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கும்.
இது குறித்து பொன்முடி கூறுகையில், தமிழக மாணவர்கள் என்ஜினீயரிங் சேர்வதில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அதனால் மாணவர்கள், பெற்றோர்கள் எந்தவித அச்சமும் அடைய வேண்டாம் என்றார்.
எம்.பி.பி.எஸ். கட்-ஆப் அதிகரிப்பு:
இதற்கிடையே தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களில் பலரும் ஒரே கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அதிகம் பேர் இடம் பெற்றுள்ளதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய முக்கியப் பாடங்களான உயிரியல்- வேதியியல்- இயற்பியலில் ஏராளமான மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்துள்ளதால், இந்த ஆண்டு மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க வரும் 28ம் தேதி எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
பொதுப் பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 197.75 ஆகும். இதில் முற்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட பொதுப் பிரிவினருக்கு 433 இடங்கள் உள்ளன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 380 இடங்கள் உள்ளன. இதில் ரேங்க் பட்டியல் அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 433 இடங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 284 மாணவர்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 196 ஆகும்.
இந்த ஆண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களில், 7,088 மாணவ-மாணவியர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை:
இந் நிலையில் தேசிய சிறுபான்மையினர் நல ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை கடந்த 2007ம் ஆண்டில் இருந்து சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் முதலிய மதத்தை சேர்ந்த பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துகுள் இருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் பிளஸ்-2 தேர்வில் 50 சதவீத மார்க் பெற்றிருக்க வேண்டும்.
படிப்புக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.20,000 மற்றும் விடுதிக் கட்டணம் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படும். விடுதியில் இல்லாத மாணவர்களுக்கு மாதம் ரூ.500 கொடுக்கப்படும்.
இதுகுறித்த விவரங்களை www.minorityaffairs.gov.in என்ற இணையத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.