நிதிஷ் Vs மோடி: குஜராத் விளம்பர ஏஜென்சியில் பிகார் போலீ்ஸ் ரெய்ட்

இதனால் நரேந்திர மோடி கடும் கோபமடைந்துள்ளார். நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியை உடனே முறிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்களை நெருக்க ஆரம்பித்துள்ளார்.
ஆனால், நிதிஷ்குமாரின் ஆதரவு இல்லாமல் பிகாரில் பாஜகவால் வெல்லவே முடியாது என்பதால், மோடியின் கருத்தை பெரும்பாலான மாநில பாஜக நிர்வாகிகள் ஏற்க மறுத்து வருகின்றனர். இதனால் பாஜகவிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதே போல ஐக்கிய ஜனதா தளத்திலும் நிதிஷ்குமார் மற்றும் கட்சியின் தலைவரான சரத் யாதவ் இடையிலும் மோதல் உருவாகியுள்ளது. கூட்டணி விவகாரங்கள் குறித்து தனி நபர் (நிதிஷ்) முடிவெடுக்க முடியாது என்றும், கட்சி தான் முடிவு செய்யும் என்றும் யாதவ் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டணி உடையாதா, நமக்கு அரசியல் மறுவாழ்வு கிடைக்காதா என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவும், லோக் ஜன் சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர்.
பிகார் வெள்ள நிவாரண பணிகளுக்கு குஜராத் மாநில அரசு கொடுத்த ரூ.5 கோடி குறித்து பிகார் மாநில பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட்டார் மோடி. இதிலிருந்து பிரச்சனை வெடித்தது. அந்தப் பணத்தை வட்டியோடு திருப்பி அனுப்பினார் நிதிஷ்.
இதையடுத்து இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. ஆனால், பிகார் மாநில பாஜக நிர்வாகிகளில் பாதி பேர் நிதிஷ் குமாருக்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் அவருக்கு ஆதரவாக உள்ளதால் டெல்லி தலைமையும், நரேந்திர மோடியும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த மோதல் ஆரம்பித்த பிறகு முதல்முறையாக, நிதிஷ் குமார் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் 9 பேரில் 4 பேர் கலந்துகொண்டனர்.
மற்ற 5 பேர் மட்டும் டெல்லியில் பாஜக தலைவர் நிதின் கட்காரி கூட்டிய கூட்டத்தில் பங்கேற்க போய்விட்டதால் அமைச்சரவையில் பங்கேற்க முடியவில்லை என்று தகவல் அனுப்பினர்.
இந் நிலையில் பத்திரிக்கைகளில் மோடிக்காக விளம்பரம் வெளியிட்ட குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள விளம்பர ஏஜென்சியில் பிகார் போலீசார் திடீரென சோதனை நடத்தியதால் பாஜக தலைமை கடுப்பாகியுள்ளது. நரேந்திர மோடியும் இதனால் மிகவும் கோபத்தில் உள்ளார்.
ஆனாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பேர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மிஞ்சியிருக்கும் ஒரே கட்சி ஐக்கிய ஜனதா தளம் மட்டும் தான் என்பதால் அந்தக் கட்சியுடன் கூட்டணி தொடர்ந்தால் தான் தேசிய அளவில் பாஜகவுக்கு மரியாதை இருக்கும் என்று பாஜக மூத்த தலைவரான அத்வான கருதுகிறார்.
இதனால் நிதிஷ்குமார் விஷயத்தில் அவசரப்படாமல் முடிவெடுக்குமாறு தலைவர்களுக்கு அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
இந் நிலையில் தான் மோதலை தீவிரப்படுத்தும் வகையில் சூரத் விளம்பர ஏஜென்சியான் எக்ஸ்பிரசன்ஸ் நிறுவனத்தில் பிகார் போலீசார் ரெய்ட் நடத்தி, அந்த விளம்பரம் தொடர்பான ஆவணங்கள், இ-மெயில்களை கைப்பற்றினர். இந்த விளம்பரத்துக்கு பணம் தந்தது யார் என்ற விசாரணையும் நடத்தினர்.












Click it and Unblock the Notifications