ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுப்பு-நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு-அதிமுக, எதிர்க்கட்சிகள் தர்ணா
டெல்லி: ஒத்திவைப்புத் தீர்மானத்தை மழைக்காலக் கூட்டத் தொடருக்குள் நிறைவேற்ற லோக்சபா சபாநாயகர் மீரா குமார் அனுமதி மறுத்ததால், இனறும் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடரின் முதல் இரு நாட்களும் விலைவாசி உயர்வுப் பிரச்சினை காரணமாக அலுவல் ஏதும் நடைபெற முடியாமல் ஒத்திவைப்புக்குள்ளானது. 3வது நாளான இன்றும் அமளி ஏற்பட்டது.
விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்புத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டு நிறைவேற்றக் கோரி பாஜக, இடதுசாரிகள், சமாஜ்வாடி உள்பட அனைத்து எதிர்க்ட்சிகளும் ஓரணியில் திரண்டு வலியுறுத்தின.
இதனால் இரு அவைகளிலும் இன்று காலை ஒரு அலுவலும் நடைபெறமுடியவில்லை. இதையடுத்து இருஅவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் தலைமையில் நாடாளுமன்றத்திற்கு முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. இதில், தெலுங்குதேசம், இடதுசாரி, அதிமுக கட்சிகள் பங்கேற்றன.