இலங்கை கண்ணிவெடி அகற்றம் பணி-இந்திய உதவி நீட்டிப்பு
சென்னை: இலங்கையில் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், தெற்கு பகுதியில் அம்பன்தோடாவிலும் 2 புதிய இந்திய துணை தூதரகங்கள் அமைக்கப்படும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
சென்னையில் முதல்வர் கருணாநிதியை நேற்று அவர் சந்தித்தபோது அப்போது வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் டி.எஸ்.திருமூர்த்தி, தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி ஆகியோரும் உடனிருந்தனர்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய நிருபமா,
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு பணிகள் தொடர்பாக முதல்வசர் கருணாநிதியுடன் விவாதித்தேன். அவர்கள் விரைவில் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவது தொடர்பாகவும், அவர்களது வாழ்வாதாரம் பற்றியும் விவாதித்தோம்.
கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் பல்வேறு முரண்பாடான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அங்கு தற்போது நிலவும் சூழல் பற்றியும், தமிழக அரசுடன், மத்திய அரசு இணைந்து அவர்களுக்கு எவ்வாறு உதவிகளை வழங்குவது என்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது.
அவர்கள் மீண்டும் விவசாயத்தில் ஈடுபடுவது, அவர்களுக்கு மருத்துவமனைகள், வீடுகள் கட்டித் தருவது பற்றியும் பேசினோம்.
தமிழகம் சார்பில் அவர்களுக்கு ஏற்கனவே நிவாரணப் பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, இந்திய அரசு சார்பிலும் 50,000 வீடுகள் கட்டித் தரப்படவுள்ளது. அதன் தொடக்கமாக, முதல்கட்டமாக 1,000 வீடுகள் கட்டித் தரப்படும்.
சில இடங்களில் வீடுகள் லேசாக சேதம் அடைந்துள்ளன. அதுபோன்ற இடங்களின் உரிமையாளர்களுக்கு சிமெண்டு, கூரைகள், செங்கற்கள் தேவைப்படும். அதை தருவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.
இலங்கையில் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், தெற்கு பகுதியில் அம்பன்தோடாவிலும் 2 புதிய துணை தூதரகங்கள் ஓராண்டுக்குள் அமைக்கப்படும். இது, இலங்கை தமிழர்களின் தேவைகளை அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும்.
இலங்கையில் போர் பாதித்த பகுதிகளில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும், அங்கு இயல்புநிலை திரும்புவதற்கு தேவைப்படுகின்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் இந்திய அரசு உறுதியாக உள்ளது.
சமீபத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்தார். அந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களின் நலன் காப்பது தொடர்பாக இந்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது என்றார்.
கண்ணிவெடி அகற்றும் பணி: இந்திய உதவி நீட்டிப்பு..
இந் நிலையில் இலங்கையில் வட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடக்கு பகுதியில் போரால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக 7 இந்திய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றன.
அவற்றின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
போரினால் இடம் பெயர்ந்தவர்களை மறுகுடியமர்த்தும் பணியையும், வடக்குப் பகுதியில் ரயில் பாதை அமைக்கும் பணியிலும், கண்ணிவெடி அகற்றும் பணியிலும் இந்த நிறுவனங்கள் ஈடுபடும்.