சிஆர்பிஎப் தலைவராக வீரப்பன் புகழ் டிஜிபி விஜயக்குமார் நியமனம்
சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழக அதிரடிப்படைக்குத் தலைவராக இருந்தவர் விஜயக்குமார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மத்தியப் பணிக்கு மாறுதலாகிச் சென்றார். ஹைதராபாத் போலீஸ் அகாடமியின் தலைவராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது விஜயக்குமாரை சிஆர்பிஎப் தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது.
மாவோயிஸ்ட் வேட்டையை சரிவர கையாளத் தெரியவில்லை என்று தற்போது சிஆர்பிஎப் தலைவர் விக்ரம் ஸ்ரீவத்சவா பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தார். இதையடுத்து நேற்று அவரை அதிரடியாக மாற்றிய மத்திய அரசு அந்த இடத்திற்கு விஜயக்குமாரை கொண்டு வந்துள்ளது.
இந்த மாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வன போர் முறைகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர் விஜயக்குமார். இவரது வனப் போர் உத்திகள்தான் வீரப்பனின் கொட்டத்தை அடக்க உதவியாக இருந்தது. வீரப்பனையும், அவனது கும்பலையும் வேரோடு ஒடுக்கியவர் விஜயக்குமார்.
மாவோயிஸ்டுகளும் தற்போது வனப் போர் முறைகளைத்தான் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். எனவே விஜயக்குமார் சிஆர்பிஎப் தலைவராகியுள்ளதன் மூலம் மாவோயிஸ்ட் வன்முறைக்கு எதிரான சிஆர்பிஎப்பின் உத்திகளில் பெரும் மாற்றம் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.
இதற்கு முன்பு விஜயக்குமார் எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐஜியாக காஷ்மீரில் பணியாற்றியபோது நல்ல பெயரெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகளின் ஊடுறுவலைத் தடுக்கும் முயற்சியில் கணிசமான வெற்றியையும் இவர் பெற்றிருந்தார். எனவே விஜயக்குமாரின் வருகை சிஆர்பிஎப்புக்கு புது பலம் கொடுக்கும் எனக் கருதப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான், விஜயக்குமாரை தனிப்பட்ட்ட முறையில் சிஆர்பிஎப் தலைவர் பதவிக்கு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாவோயிஸ்ட் பிரச்சினை மட்டுமல்லாமல் காஷ்மீர் கலவரத்தைக் கையாண்ட விதத்திலும் ஸ்ரீவத்சவா மீது பெரும் அதிருப்தி நிலவியது. கண்மூடித்தனமாக சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி வந்ததால்தான் அங்கு பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன. இதையடுத்தே ஸ்ரீவத்சவாவை மாற்ற தீர்மானிக்கப்பட்டது.
மேலும் காஷ்மீரில் விஜயக்குமார் பணியாற்றியபோது அங்கு அவருக்கு நல்ல பெயர் இருந்தது. எனவேதான் விஜயக்குமாரை சிஆர்பிஎப்புக்குக் கொண்டு வந்ததன் மூலம் காஷ்மீரிலும், மாவோயிட்ஸ் வன்முறைக்கு எதிரான போரிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மத்திய அரசு கருதியது.