'மரணம் உறுதி-புனிதப் பணி தொடங்கி விட்டது'-ஜெ.வுக்கு 10வது மிரட்டல் கடிதம்!
ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சரமாரியாக கொலை மிரட்டல் விடுத்து கடிதங்கள் வந்து கொண்டுள்ளன. இவை எங்கிருந்து வருகின்றன, யார் அனுப்புவது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கை சிபிஐக்கு விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையிலும் தொடர்ந்து கடிதங்கள் வந்தவண்ணம் உள்ளன.
ஏற்கனவே 9 மிரட்டல் கடிதங்கள் வந்து அவை சென்னை கிண்டி போலீஸாரின் விசாரணையில் உள்ள நிலையில் நேற்று 10வது கடிதம் வந்து சேர்ந்தது.
4 பக்கத்தில் தமிழில் எழுதப்பட்டிருந்த இந்தக் கடிதத்தில் ஏகப்பட் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் இருந்தன. வத்தலக்குண்டு காந்தி நகர், மதுரைவீரன் கோவில் தெரு, 1-வது வார்டு கவுன்சிலர் சி.அமுதவேல் என்ற பெயரில் அனுப்பப்பட்ட இக்கடிதத்தில் 98421 45011 என்ற செல்போன் நம்பரும் இடம் பெற்றுள்ளது.
கடிதத்தில், இதற்கு முன்பு மிரட்டல் கடிதம் எழுதியவர்கள் அவர்களுடைய உண்மையான பெயரையும், முகவரியையும் எழுதவில்லை. ஆனால், நான் என்னுடைய உண்மையான பெயரை, முகவரியோடு குறிப்பிட்டுள்ளேன். சி.பி.ஐ. போலீஸ் விசாரிக்கட்டும். என்னை ஒன்றும் செய்ய முடியாது.
எனது குலதெய்வம் என்னை காப்பாற்றும். இதற்கு முன்பு வந்த கடிதங்களில், ஜெயலலிதா மதுரைக்கு வரக்கூடாது என்றும் வந்தால் உயிரோடு திரும்பமாட்டீர்கள் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், நான் நீங்கள் கண்டிப்பாக அக்டோபர் 18-ந் தேதியன்று மதுரை பொதுக்கூட்டத்திற்கும், 30-ந் தேதியன்று தேவர் குருபூஜைக்கும் தவறாமல் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்போது உங்கள் மரணம் உறுதி. இந்த புனித பணி தொடங்கிவிட்டது. இதற்காக 57 பேர் குண்டர் தடுப்பில் இருந்து ஜெயிலைவிட்டு விடுதலையாகி இருக்கிறார்கள். நான் ஒரு மனித குண்டு. தற்கொலை படையும் ரெடியாகிறது என மிரட்டப்பட்டுள்ளது.
வழக்கம் போல இக்கடிதமும் ஜெயா டிவி அலுவலகத்திற்கு வந்தது. இதையடுத்து ஜெயா டிவி நிர்வாகத்தினர் கிண்டி காவல் நிலையத்தில் கடிதத்தை ஒப்படைத்து புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து உடனடியாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
முதல் கட்டமாக அந்தக் கடிதத்தில் உள்ள செல்போன் எண்ணை போலீஸார் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இருப்பினும் தொடர்ந்து அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள போலீஸார் முயன்று வருகின்றனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய கட்சியின் தலைவருக்கு இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்து கடிதம் ஏதும் அனுப்பப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு கடிதம் குறித்து கூட போலீஸாருக்கு துப்பு ஏதும் கிடைக்கவில்லை என்பது அதை விட முக்கியமானது.