கர்நாடகம்: 5 சுயேச்சை எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்தது சரியே-சபாநாயகர்
பெங்களூர்: 5 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் உள்பட 16 எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை என்று கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் கே.ஜி.போப்பையா கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், அரசியல் சட்டத்தின் 10வது பிரிவின்படி கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தான் 16 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது முழுக்க- முழுக்க சட்டத்துக்குட்பட்டதே.
5 சுயேச்சை எம்.எல்.ஏக்களை நீக்கியது அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் சொல்ல இயலாது. ஏனெனில் அந்த 5 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியுடன் சேர்ந்து செயல்படும் பட்சத்தில் அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியும். சட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறது.
5 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் ஏற்கனவே என்னிடம் கொடுத்த ஆவணங்களில், அவர்கள் பாஜகவில் சேர்ந்து இருப்பதாக எழுதிக் கொடுத்துள்ளனர். அந்த ஆவணங்களை ஆதாரமாக வைத்துத்தான் 5 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பாஜக எம்.எல்.ஏக்கள் 11 பேர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதற்கு உலகமே சாட்சியாக உள்ளது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதால் அவர்கள் பதவியை இழந்துள்ளனர். சபாநாயகர் என்ற வகையி்ல் எனது இந்த முடிவில் யாரும் தலையிட முடியாது.
முதல்வர் எதியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க முனைந்தபோது குரல் மூலம் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று நான் அறிவித்தேன். அதற்கு எந்த உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவேதான் நான் குரல் வாக்கெடு்பு நடத்தினேன். இதை விதிமுறை மீறல் என்று சொல்ல முடியாது.
சட்டசபை விதிகளின்படிதான் ஓட்டெடுப்பு நடத்தி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்துவதற்கு கால அவகாசம் என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. குறுகிய நேரத்துக்குள் ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா, இல்லையா என்ற ஒரே ஒரு விஷயம் மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்றார்.
மத்திய அரசின் சிக்கல்:
சுயேச்சைகளின் தகுதி நீக்கம் தொடர்பாக கவர்னர் பரத்வாஜ் கொடுத்துள்ள அறிக்கையை வைத்து மத்திய அரசு அவசரப்பட்டு கர்நாடக ஆட்சியை கலைக்க முடியாத நிலை உள்ளது.
இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தே கவர்னரின் அறிக்கையை மத்திய அரசு அமலாக்க முடியும் என்ற நிலைமை உள்ளது.
மேலும் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல் பெறவேண்டுமெனில், நாடாளுமன்றத்தி்ன் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், ராஜ்யசபாவில் காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லை. இதனால் அவ்வளவு எளிதில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதற்கு கூட்டணிக் கட்சிகளின் முழு ஆதரவும் காங்கிரசுக்குத் தேவைப்படுவதோடு, பாஜக அல்லாத பிற எதிர்க் கட்சிகளின் உதவியும் தேவைப்படும்.
எம்எல்ஏக்களுக்கு ரூ. 25 கோடி கொடுத்துள்ளனர்-எதியூரப்பா:
இதற்கிடையே ஒவ்வொரு அதிருப்தி எம்.எல்.ஏவுக்கும் ரூ. 25 கோடி வரை மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி தரப்பு கொடுத்துள்ளதாக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.
மெஜாரிட்டியை நிரூபித்த பின் நிருபர்களிடம் பேசிய அவர், சட்டசபையில் நிருபர்கள் மீதும் போலீஸார் கடும் கெடுபிடி செய்தனர் என்ற தகவல் அறிந்தேன். அது தவறு. இது தொடர்பாக விசாரி்த்து தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்.
பெண் நிருபர்களும் கெடுபிடிக்கு தப்பவில்லை என்று தெரியவந்தது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
கவர்னர் விதான் சவுதாவில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்றார். அதன்படி மெஜாரிட்டியை நிரூபித்துவிட்டேன்.
ஆனால், அவையை நடத்தவிடாமல் எதி்ர்க் கட்சியினக் கலாட்டா செய்தனர்.சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மேஜை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்.
மதசார்பற்ற ஜனதா தளத்தினரும் காங்கிரசாரும் என்னையும், சபாநாயகரையும் தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தினர்.
குமாரசாமி செய்த செயல் துரியோதனன் வேலை. பாஜக எம்.எல்.ஏக்கள் வெவ்று காரணத்திற்காக சென்னை, கோவாவில் கூட்டம் நடத்தினார்கள். அங்கு இவர் ஏன் சென்றார்?, ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் 25 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இந்தப் பணம் எப்படி வந்தது?
இதை சும்மா விடமாட்டேன். பணம் வந்த வழி, யார் யார் இதில் உடந்தை என்பது குறித்தும் முழு விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். விரைவிலேயே அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். கர்நாடகா சட்டசபையில் நடந்த சம்பவம் பற்றி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.