கோவளத்தில் சுற்றுலா சீசன் தொடங்கியது : வெளிநாட்டுப் பயணிகள் வரவு அதிகரிப்பு
திருவனந்தபுரம்: இயற்கையோடு சேர்ந்து மலையாள மணம் வீசும் கோவளத்தில் சீசன் துவங்கியது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி கடற்கரை களைகட்டத் தொடங்கியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே அரபிக்கடலோரம் கோவளம் கடற்கரை உள்ளது. திருவிதாங்கூர் மன்னரால் 1930-ம் ஆண்டு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. துவக்கத்தில் கோவன்குளம் என்று அழைக்கப்பட்டது. பின் அந்த பெயர் கோவளமாக மாற்றப்பட்டது. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தென்னகத்தில் உள்ள சிறந்த துறைமுகங்களில் ஒன்றான விழிஞ்ஞத்தில் இருந்து களியக்காவிளை, ஊரம்பு, பூவார் கடற்கரையோர வழியாக எளிதில் செல்லலாம்.
இந்த கடற்கரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. இங்கு வீசும் குளிர்ந்த காற்று உடலை மட்டுமல்லாமல் உள்ளத்தையும் குளிரச் செய்யும். அயராது உழைத்து ஓய்வு தேடி வரும் சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை அன்னையின் வரப்பிரசாதமாகவே இந்த கடற்கரை உள்ளது. கோவளத்தில் ஆண்டுதோரும் செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரை சுற்றுலா சீசன் களைகட்டும். இந்த சீசன் காலத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
கப்பல் மற்றும் படகில் அனுபவிக்க முடியாத இயற்கையான அனுபவத்தை கட்டுமரத்தில் சென்று அனுபவிக்க கூடிய வாய்ப்பாக உள்ளது. காலநிலையும் ரம்மியமான நிலையில் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர்.