'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை: சென்னையை அச்சுறுத்தும் 'ஜல்' புயலை சமாளிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி வளாகத்தில் ரிப்பன் மாளிகைக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை பார்வையிட்ட சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில்,
சென்னையை 'ஜல்' புயல் தாக்கினால் அதை சமாளிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கனத்த மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களை தங்க வைப்பதற்கான இடங்களும் தேர்வு செய்யபட்டுள்ளன. 4 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை அகற்ற 150 ராட்சத மோட்டார்கள் மீட்பு பணிகளுக்காக 10 படகுகள், பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
அனைத்து பணியாளர்களும் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரிப்பன் மாளிகை கூடுதல் கட்டிடம் ரூ.22 கோடி செலவில் கட்டப்படுகிறது. 1 லட்சத்து 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 7 மாடிகளுடன் இந்தக் கட்டடம் அமைகிறது. இந்த புதிய கட்டிடத்தில் மேயர், கமிஷனர் அறைகள், நிலைக்குழு தலைவர்கள் அறைகள், நிர்வாக அலுவலகங்கள் செயல்படும்.
இந்த பணிகள் இன்னும் 7 மாதத்தில் முடிவடையும் என்றார்.
'ஜல்' புயல்: நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு உத்தரவு:
இந் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் இன்று காலை நிலவரப்படி வங்கக் கடலில் சென்னைக்கு அருகில் 800 கிலோ மீட்டர் தொலைவில் 'ஜல்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் மையம் கொண்டிருக்கிறது.
அந்த புயல் தமிழகத்திற்கும், ஆந்திராவில் உள்ள ஓங்கோலுக்கும் இடையில் கரையை கடக்க கூடும்.
அதன் காரணமாக தமிழகத்தில் அதிவேகமான காற்றுடன் கூடிய பெருமழை பெய்யக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.
இதனையொட்டி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவித்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.