முருங்கைகாய் விலை கிலோ ரூ 100!
நெல்லைப் பகுதியில் ஆலங்குளம் தையல் நாயகி மார்க்கெட்டுக்கு தினமும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. இங்கு கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் சில்லரை வியாபாரிகளுக்கும், கேரள மாநிலத்துக்கும் விற்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கேரள மற்றும் வெளி மாவட்டங்களுக்கு காய்கறிகள் அதிகமாக கொண்டு செல்லப்பட்டதால் தக்காளி, கத்தரி, வெண்டை தவிர அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்தது.
தீபாவளி பண்டிகைக்கு பிறகு தற்போது காய்கறிகளின் விலை ஓரளவு குறைந்துள்ளது. அதே நேரம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கிலோ ரூ.3 வரை விற்பனையான முருக்கைகாய் விலை முன் எப்போதும் காணாத வகையில் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
நேற்று ஆலங்குளம் மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைகாய் விலை ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் சில்லரை வியாபாரிகள் முருங்கைகாய் வாங்கி செல்வதை தவிர்த்தனர்.
இந்த மாதம் முகூர்த்த மாதம் என்பதால் திருமணம் மற்றும் விஷேச நிகழ்ச்சி வைத்திருப்பவர்கள் மட்டும் விலையை சகித்து கொண்டு முருங்கை காயை வாங்கிச் சென்றனர்.
சமீபத்திய நிலவரப்படி வெண்டை, கத்தரி, தக்காளி, புடலைங்காய், பீட்ரூட் போன்ற காய்கறிகளின் விலை கிலோ ரூ. 15 முதல் ரூ.100 வரை சில்லரை விற்பனை கடையில் விற்பனை செய்யப்பட்டன.
உள்ளூர் உற்பத்தி மற்றும் வெளிமாவட்ட வரத்து குறைந்ததே முருங்கை காய் விலை ஏற்றத்திற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.