காலவரையற்ற லாரி ஸ்டிரைக்-இன்று முதல் படிப்படியாக ஆரம்பம்!
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரியை சீரமைக்க கோரி வருகிற 5-ந் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. ஆனாலும் இந்த விவகாரத்தில் எந்த சுமூகத் தீர்வையும் அரசுத் தரப்பில் முன்வைக்காததால், லாரிகள் வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது.
இந்தியா முழுவதும் சுமார் 74 லட்சம் லாரிகள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்து 97 ஆயிரம் சரக்கு வாகனங்கள் உள்ளது. இவை அனைத்தும் இன்று முதல் ஓடாது.
இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரைலர் லாரி உரிமையாளர்கள் சங்கம், பெட் ரோல்,டீசல் ஏற்றிவரும் டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் சங்கம், துறைமுக தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், டாக்சி ஓட்டுனர்கள் சங்கம், அனைத்து மோட்டார் சங்கம், லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சங்கம் ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு லாரிகள் இன்று முதல் இயக்கப் படவில்லை. சென்னையில் இருந்து 5 ஆயிரம் லாரிகள் வெளிமாநிலங்களுக்கு சென்று வருவது உண்டு.
அந்த லாரிகளுக்கான சரக்கு ஆர்டர் எடுக்கப்படவில்லை. 3 மாவட்டத்தில் இருந்தும் சுமார் 15 ஆயிரம் லாரிகள் வெளி மாநிலங்களுக்கு செல்லவில்லை.
சரக்குகள் போக்குவரத்து ஸ்தம்பிக்க ஆரம்பித்துள்ளது.
இதேபோல வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு சரக்குகள் ஏற்றி வரக்கூடிய லாரிகளும் இன்று புறப்படவில்லை. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் லாரிகளின் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை உள்பட பல நகரங்களுக்கு வரக்கூடிய பழங்கள், காய்கறிகள், ஜவுளி வகைகள், அரிசி, மார்பிள்ஸ் போன்றவை வருவதும் நின்றுள்ளது.
வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் அத்தியாவசிய பொருட்கள் வருவதில் தடை ஏற்பட்டுள்ளதால் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கியாஸ் டேங்கர் லாரிகளும் போராட்டத்தில் பங்கேற்பதால் தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
வேலை நிறுத்தம் காரணமாக இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் நாள்தோறும் ரூ. 500 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்படுமாம்.