கையெழுத்தே இல்லாமல் அறிக்கை தாக்கல்-அமலாக்கப் பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
டெல்லி: கையெழுத்தே போடாமல் கருப்புப் பணம் தொடர்பான விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்த மத்திய அமலாக்கப் பிரிவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் தொடர்பான விசாரணையில் அமலாக்கப் பிரிவு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் நிலவரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அமலாக்கப் பிரிவும் ஒரு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
மூடி சீலிடப்பட்டிருந்த கவரில் வைத்து அறிக்கையை கொடுத்திருந்தனர். அதை நேற்று நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பரிசீலித்தது. அப்போது அறிக்கையில் கையெழுத்து எதுவும் இடப்படாமல் இருந்ததைப் பார்த்த நீதிபதிகள் கோபமடைந்தனர்.
இதையடுத்து, இந்த அறிக்கையை ஏற்கவே முடியாது. இப்படித்தான் அறிக்கை சமர்ப்பிப்பதா. இதில் யாருடைய கையெழுத்தும் இல்லை. உரிய கையெழுத்துடன் இதை சமர்ப்பித்தால் மட்டுமே ஏற்க முடியும். டிசம்பர் 10ம் தேதிக்குள் அமலாக்கப் பிரிவு தனது விசாரணை நிலவரத்தை உரிய முறையில் தெரிவிக்க வேண்டும் என்று கண்டிப்பு கலந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.
நேற்றைய விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பரக் திரிபாதி கூறுகையில், இந்தவழக்கில் தொடர்புடைய சில முக்கிய ஆவணங்களை பகிரங்கமாக வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் அது விசாரணையைப் பாதிக்கும்.
இது பொது நலன் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதுதொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. அதேசமயம், இதை பொதுமக்களுக்குத் தெரிவித்தால் விசாரணைக்குப் பாதிப்பு ஏற்படும் என்றார்.
அதைக் கேட்ட நீதிபதிகள் அனைததையும் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரவே இல்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை தொடங்கியதாக மத்திய அரசு கூறியது. அதன் பிறகு என்னதான் நடந்து வருகிறது என்பதை மட்டுமே மனுதாரர் அறிய விரும்புகிறார்.
2009ம் ஆண்டுசெப்டம்பர் மாதம் விசாரணை தொடர்பாக நோட்டீஸ் பிறப்பித்தோம். அதன் பிறகு என்னதான் நடந்து வருகிறது என்பது எங்களுக்குத் தெரிய வேண்டாமா என்று கேட்டனர்.
இந்த வழக்கை பிரபல வக்கீலும், பாஜகவைச் சேர்ந்தவருமான ராம்ஜேட்மலானி உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.