திருச்சி சாப்ட்வேர் பூங்கா: ஸ்டாலின் திறந்து வைத்தார்-20,000 பேருக்கு வேலை கிடைக்கும்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகாவில் ரூ. 60 கோடி முதலீட்டில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின்,
இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்து கிடைத்துள்ளது பெருமைக்குரிய விஷயம்.கடந்த 2009-10ம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் இருந்து சுமார் ரூ.26.23 கோடி அளவிற்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இனி இது பல மடங்காக உயரும்.
இந்த பூங்காவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.800 கோடி வரை முதலீடுகள் வரும். இதன் மூலம் 20,000 பேருக்கு நேரடியாகவும், 40,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்தியாவில் சாப்ட்வேர் ஏற்றுமதியில் முதல் 3 மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குனர் சந்தோஷ் பாபு, தகவல் தொழில்நுட்ப முதன்மைச் செயலாளர் டேவிதார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பூங்காவில் எச்சிஎல், சைலாக் சிஸ்டம்ஸ், ஹெல்த் பிளான் சிஸ்டம்ஸ், இன்டெக்ரா சாப்ட்வேர், ஐவேவ் சிஸ்டம்ஸ், லாஸ்ட் பீக் டேட்டோ லிமிடெட், டேக் சொல்யூசன்ஸ், அஸிஸ்ட் இன்டர்நேசனல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கிளைகளைத் தொடங்க ஏற்கனவே நிலம் ஒதுக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் இங்கு கிளைகளை அமைக்கவுள்ளன.