டைம்ஸ் இதழின் மறக்கமுடியாத சாதனைப் பக்கங்களில் சச்சின்!
இந்தியாவைப் பொறுத்தவரை, இன்றைய தேதிக்கு அப்படிப்பட்ட ஒருவர் கிரிக்கெட்டின் துருவ நட்சத்திரமாக ரசிகர்கள் கொண்டாடும் சச்சின்!
அவர் களத்தில் நின்றாலும் கணநேரத்தில் வெளியேறினாலும், கடவுளுக்கு நிகரான மரியாதையை மக்கள் அவருக்குத் தரத் தயங்கியதே இல்லை. காரணம் அவரது நேர்மை!
கிரிக்கெட் என்பது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்ற தனியார் அமைப்பின் ஏற்பாட்டில் நடப்பது உண்மையென்றாலும், அதை கபில்தேவ், சச்சின் போன்ற மேதைகள் இந்த நாட்டின் கவுரவமாகவே கருதி விளையாடினர்.
அதனால்தான் சச்சினின் ஒவ்வொரு சாதனை உரத்து ஒலிக்கப்படும்போதும், இந்தியர்கள் மாநிலம் / மொழி பேதங்கள் கடந்து 'எங்காளு சாதனையைப் பாருய்யா' என நெஞ்சு நிமிர்த்திக் கொள்கின்றனர்.
கிரிக்கெட்டில் சச்சின் என்னென்ன சாதனைகளைச் செய்தார் என்று இனி கேட்பது மகா அபத்தம்... அவர் சாதிக்காதது என்ன என்று வேண்டுமானால் கேட்கலாம்!
இந்த ஆண்டு டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2010 ம் ஆண்டின் 'மிகச்சிறந்த விளையாட்டு தருணங்கள்' பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டில் விளாசிய இரட்டை சதம் இடம்பிடித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரியில் குவாலியர் நகரில் நடந்தது இந்த மறக்கமுடியாத போட்டி. பலம் வாய்ந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை குவித்தார் சச்சின்.
இப்போட்டியை நேரடியாகவும், தொலைக்காட்சி வழியாகவும் 1.5 மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து ஆர்ப்பரித்தனர்.
சச்சின் 200 ரன்களைத் தொட்ட அந்த நிமிடம், உலக கிரிக்கெட் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் மிதந்தனர் என்றால் மிகையல்ல. சென்னையில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அந்தத் தருணத்தை மக்கள் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
சச்சினின் இந்த அற்புதமான இன்னிங்ஸையும், அதைப் பார்த்து மக்கள் அடைந்த மகிழ்ச்சியையும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள டைம்ஸ், "அவர் 199 ரன்களை எட்டிப்பிடித்து, இரட்டை சதம் அடிக்க ஒரு ரன் எடுக்கவிருந்த நிலையில் அரங்கமே அந்த தருணத்திற்காக உற்சாக கரகோசம் எழுப்பியது. அங்காங்கே ரசிகர்கல் இந்திய தேசிய கொடியை தங்கள் உடல்களில் பச்சை குத்திக் கொண்டு உணர்ச்சிமயமாய் காட்சி தந்தனர். எங்கும் எதற்காகவும் பார்த்திருக்க முடியாது இப்படிப்பட்ட காட்சிகளை" என வர்ணித்துள்ளது.