அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்-2 பிரிட்டிஷார் உள்பட 6 அல் கொய்தாவினர் பலி
இஸ்லாமாபாத்: அமெரிக்க படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த 2 பிரிட்டிஷார் உள்பட 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது. இந்த இரு பிரிட்டிஷாரும், சமீபத்தில் இஸ்லாமுக்கு மாறியவர்கள். அல் கொய்தா அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்தனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஒரு வாகனத்தில் போய்க் கொண்டிருந்தபோது இவர்களும் ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி இறந்தனர்.
வசிரிஸ்தான் பகுதி பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டிலேயே இல்லை. தலிபான்கள், அல் கொய்தாவினரால் நிறைந்துள்ள இப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்தபடி அடிக்கடி அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வசிரிஸ்தான் பகுதியிலிருந்து தீவிரவாதிகளை ஒழிக்குமாறு அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானை வற்புறுத்தி வருகிறது. ஆனால் பொருத்தமான நேரத்தில் அதைச் செய்ய முடியும் என்று கூறி வருகிறது பாகிஸ்தான். இதனால்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்தபடி வசிரிஸ்தானில் அடிக்கடி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.
கொல்லப்பட்ட இரண்டு இங்கிலாந்துக்கார்ரகளின் பெயர்கள் ஸ்டீபன் மற்றும் டேரி ஸ்மித் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் கொல்லப்பட்ட பகுதியின் பெயர் டாடா கெல் என்பதாகும். இந்தப் பகுதி தீவிரவாதிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.