இயேசுநாதர் இயலாதவர்களிடம் கருணை கொண்டது போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகெங்கும் வாழும் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவரும் டிசம்பர்த் திங்கள் 25ஆம் நாளன்று கிறிஸ்துமஸ் திருநாளை மிகுந்த எழுச்சியோடும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியோடும் கொண்டாடுகிறார்கள்.
யேசு கிறிஸ்து ஏழைகளுக்காக இரங்கியவர்; ஏழை எளியவர்கள் புறக்கணிக்கப்படுவதை, ஒதுக்கப்படுவதைக் கண்டு வேதனைப்பட்டவர். அவர் களை அரவணைத்திட அறிவுரைகளை வழங்கியவர்; வாழ்ந்து காட்டியவர்.
ஒரு முறை நடுத்தர வகுப்பைச் சார்ந்த ஒருவரின் வீட்டுக்கு விருந்தாளியாகச் சென்ற இயேசு, அவரிடம் விருந்துக்கு அழைக்கப்பட வேண்டியவர் யார் யார் என்பதைக் கூறும்போது, நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டார்களையோ அழைக்க வேண்டாம்; மாறாக, நீர், விருந்து அளிக்கும்போது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழையும் என்று கூறியதாக, இயேசு நாதரின் சீடர்களில் ஒருவராகிய லூக்கா குறிப்பிட்டுள்ளார்.
இப்படி யேசு கிறிஸ்து ஏழைகளிடம் - இயலாதவர்களிடம் கருணை கொண்டதுபோல, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை, திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற நலத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளியோரைக் காத்துவரும் தமிழக அரசின் சார்பில் தமிழகத்தில் கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாடி மகிழும் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.
இதேபோல காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், காங்கிரஸ் கட்சியின் கோஷ்டித் தலைவர்களில் ஒருவரான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications