நாயுடுவுக்கு வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்ட குளுக்கோஸ்!
ஹைதராபாத்: சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து அவரை வலுக்கட்டாயமாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரண உதவிகளை வழங்கக் கோரியும், மாநில அரசைக் கண்டித்தும் ஹைதராபாத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் நாயுடு.
அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் அவரைக் கைது செய்து தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை ஹைதராபாத் நிஜாம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கும் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார் நாயுடு. திரவ உணவுகளை கூட எடுத்துக் கொள்ள மறுக்கிறார். குளுக்கோஸ் ஏற்றவும் அனுமதி மறுத்து வருகிறார். இதனால் அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று 7வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார் நாயுடு. அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளிக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவரை மாற்ற முயன்றனர் டாக்டர்கள். ஆனால் நாயுடு அதை ஏற்கவில்லை. இருப்பினும் அவரைக் கட்டாயப்படுத்தி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றனர். இதற்காக போலீஸாரின் உதவியையும் டாக்டர்கள் நாடினர்.
தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னர் நாயுடுவுக்கு குளுக்கோஸ் ஏற்றும் பணிகள் தொடங்கின. நீண்ட போராட்டத்திற்குப் பிறகே குளுக்கோஸ் செலுத்த முடிந்தது. இதையடுத்து இன்னும் 24 மணி நேரத்தில் நாயுடுவின் நிலை ஸ்திரமாகும் என்று மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் பி.வி.ரமேஷ் தெரிவித்தார்.
கூடுதல் நிவாரணத்திற்கு முதல்வர் மறுப்பு
இதற்கிடையே, விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்க முடியாது என்று ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நாயுடுவின் உயிரோடு கிரண் குமார் ரெட்டி விளையாடி வருவதாக அவை குற்றம் சாட்டியுள்ளன.
தியாகத்தை விட உயிர் முக்கியம்-ஜெ.
இதற்கிடையே, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடக் கோரி நாயுடுவுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில்,
விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் போராட்டம் நடத்திய உங்களுக்கு ஏற்கனவே வாழ்த்து தெரிவித்து இருந்தேன். ஆனால் 8வது நாளாக நீங்கள் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உடலை வருத்தி கொள்வது கவலை அளிக்கிறது.
உங்கள் தியாகத்தை விட உங்கள் உயிர் முக்கியமானது. உங்கள் சேவை மாநில மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தேவை. எனவே உண்ணாவிரதத்தை கைவிட்டு வேறு மாதிரி போராட்டத்தை நடத்துமாறு தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.