பிப். 3ல் திமுக பொதுக்குழு கூட்டம்: தேர்தல் நிதி திரட்டும் பணிகளைத் துவக்க வேண்டுகோள்
சென்னை: பிப்ரவரி மாதம் 3-ம் தேதி திமுக பொதுக் குழு கூட்டத்தை கூட்டியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இதில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
இது குறி்த்து திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறி்த்து ஆலோசிக்க முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக மேல்மட்டத் தலைவர்கள் கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
இதில் பிப்ரவரி மாதம் 3-ம் தேதி கலைஞர் அரங்கில் திமுக பொதுக்குழு கூட்டம் கூட்ட முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நிதி திரட்டும் பணிகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக துவங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் கருணாநிதி தேர்தல் நிதிக்காக ரூ. 11 லட்சம் வழங்கினார். இதையடுத்து பேராசிரியர் அன்பழகன் ரூ.1 லட்சம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 250, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 500, துரைமுருகன் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம், வீரபாண்டி ஆறுமுகம் ரூ. 5 லட்சத்து 10 ஆயிரம், கே.என்.நேரு ரூ.5 லட்சத்து 4 ஆயிரம், இ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு ஆகியோர் தலா ரூ.5 லட்சத்து 5 ஆயிரம், சுரேஷ் ராஜன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், டி.கே.எஸ்.இளங்கோவன் ரூ. 4 ஆயிரம், கல்யாண சுந்தரம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம், சுப்புலட்சுமி ஜெகதீசன் ரூ.10 ஆயிரம், கோவை மு.கண்ணப்பன் ரூ. ஆயிரத்து 500 வழங்கினார்கள்.
நேற்று ஒரே நாளில் ரூ. 44 லட்சத்து 17 ஆயிரத்து 250 தேர்தல் நிதி திரட்டப்பட்டது என்று அதில் கூறப்பட்டிருந்தது.