பணியில் தூங்கி விழுந்த போலீசாருக்கு டிரான்ஸ்பர்: எஸ்பி அதிரடி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இரவு ரோந்துக்கு செல்லாமல் தூங்கிய 5 போலீஸ் அதிகாரிகளை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி விஜேயந்திர பிதாரி உத்தரவிட்டார். இதனால் போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.
நெல்லை எஸ்பியாக பொறுப்பேற்ற விஜேயந்திர பிதாரி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். தினமும் ஓரிரு காவல் நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அப்போது அவர் காவலர்கள் பணியில் ஒழுங்காக இருக்கிறார்களா, அவர்கள் ஷூ, பேட்ஜ், யூனிபார்ம் எல்லாம் சரியாக அணிந்துள்ளார்களா, அங்குள்ள ஆவணங்கள் எல்லாம் சரியாக பராமரிக்கப்படுகிறதா, பொது மக்கள் புகார் மீது சரியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நான்குநேரி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கு பேட்ஜ் அணியவில்லை என்று ஏட்டு ராஜா என்பவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதே போல் ஏர்வாடி காவல் நிலையத்தில் திருநாவுக்கரசு என்ற காவலர் ஷூ அணியவில்லை என்பதற்காக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையி்ல் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி விஜேயந்திர பிதாரி பணியிலிருக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியில் இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள ஒரு சில அதிகாரிகளைத் மைக்ரோபோனில் தொடர்பு கொண்டார்.
எஸ்பி தொடர்பு கொண்டபோது அவர்கள் பணியில் தூங்கி கொண்டிருந்தனர். இதையடுத்து தாழையுத்து டிஎஸ்பி தியாகராஜன், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் அசோகன், ஆலங்குளம், புளியங்குடி பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 5 பேரை நேற்றிரவு ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றி உத்தரவிட்டார்.