அதிமுக தொகுதி உடன்பாடு: புதிய தமிழகம்-2, இந்திய குடியரசு கட்சி-1
புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகளையும் இந்திய குடியரசுக் கட்சிக்கு ஒரு தொகுதியையும் ஒதுக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசனும் நேற்றிரவு கையெழுத்திட்டனர்.
மே மாதம் நடக்கவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக எட்டப்பட்ட முதல் தொகுதிப் பங்கீடு இது தான்.
அதிமுக கூட்டணியில் மேலும் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மனித நேய மக்கள் கட்சி, நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி ஆகியவையும் உள்ளன.
இவையெல்லாம் எண்ணிக்கைக்கு உதவலாமே ஒழிய அதிமுகவுக்கு வெற்றி தேடித் தரக் கூடிய அளவுக்கு இந்தக் கட்சிகளுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இதனால் விஜய்காந்தின் தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக கடுமையாக முயன்று வருகிறது. இதற்கான வேலைகளை முன்பு பிரபலமாக விற்ற ஒரு வார இதழின் ஆசிரியர் தான் தீவிரமாக செய்து வருகிறது. ஆனால், இதுவரை அதற்கு பலன் கிடைக்கவில்லை.
காரணம், விஜய்காந்து போட்டு வரும் நிபந்தனைகள். தனது கட்சிக்கு குறைந்தபட்சம் 50 இடங்கள், துணை முதல்வர் பதவி, தேர்தலை சந்திக்கத் தேவையான நிதி உள்ளிட்ட பிற உதவிகள் தரப்பட வேண்டு்ம் என்று விஜய்காந்த் கூறி வருவதாகத் தெரிகிறது.
ஆனால், ஜெயலலிதாவை முதல்வராக்க விஜய்காந்த உதவ வேண்டும் என்ற அடிப்படையில் மட்டும் அந்தப் பத்திரிக்கையாளர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு இதுவரை பலன் ஏற்படவில்லை.
இந் நிலையில் புதிய தமிழகம் மற்றும் இந்திய குடியரசுக் கட்சி ஆகிய தாழ்த்தப்பட்டோருக்காக பாடுபடும் கட்சிகளுடன் ஜெயலலிதா தொகுதிப் பங்கீட்டைச் செய்துள்ளார்.