சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
தென்காசி: சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் முதல்வர் கருணாநிதி நற்செய்தி கூறவிருக்கிறார் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தென்காசி அருகேயுள்ள அச்சன்புதூர் நெடுவயலில் நடைபெற்ற பள்ளி கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பள்ளிக் கல்வி துறைக்கு மொத்தம் ரூ.3500 கோடி மட்டுமே கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல்வர் கல்வி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டது. நகர மக்களின் கல்விக்கு இணையாக கிராம பகுதி மாணவர்களின்ம் கல்வி தரம் உயர வேண்டும் என்று கருதிய முதல்வர் தற்போது கல்வி துறைக்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைவருக்கும் ஒரே கல்வி என்ற கொள்கையை வலியுறுத்தி சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தரமான கல்வி அனைவருக்கும் வழங்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு 1 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அரசு உதவி பெரும் சிறுபான்மை, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டு காலமாக போதிய சம்பளம் இன்றி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் ஏக்கத்தை போக்கிட இன்னும் ஓரிரு நாளில் முதல்வர் மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பை வெளியிடவுள்ளார். தமிழகத்தில் 6 முதல் 14 வயதுக்குள் பள்ளி செல்வோர் எண்ணிக்கை 99 சதவிதமாக அதிகரித்துள்ளது என்றார்.
முன்னதாக பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுபபினர் பீட்டர் அல்போன்ஸ் இளம் ஆசிரியர்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கருணாநிதி என பெயர் வைக்க வேண்டும். அந்த அளவுக்கு முதல்வர் உங்களுக்கு சம்பள உயர்வை வழங்கியுள்ளார். தற்போது ஒதுக்கியுள்ள 12 ஆயிரத்து 300 கோடி ரூபாயில் 90 சதவீதம் உங்கள் சம்பளம்தான். மீதி தொகைதான் கல்விக்கு பயன்படுகிறது. ஆகவே முதல்வர் பெயரை உங்கள் குழந்தைகளுக்கு வையுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications