இலங்கைத் தூதரகம் முற்றுகை: கனிமொழி எம்பி கைது!
நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை சிறைப் பிடிக்கப்பட்டனர்.
இலங்கைக் கடற்படையின் இந்தச் செயலைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரியும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதே போல மாநிலத்திலுள்ள அனைத்துத் துறைமுகங்கள் முன்பும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனே விடுவிக்கக் கோரி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை திமுகவினர் முற்றுகையிட முயன்றனர். மைலாப்பூரில் இருந்து கனிமொழி தலைமையில் பேரணியாக புறப்பட்டு இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றபோது கனிமொழி எம்பி கைது செய்யப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை கடற்படை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி இலங்கை அரசை மட்டுமல்லாமல் மத்திய அரசையும் முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தாவிட்டால், எங்களது போராட்டம் மேலும் தீவிரமடையும்," என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநிலங்களை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.