ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ள மதுரை-நெல்லை ஐடி பூங்காக்கள்

Subscribe to Oneindia Tamil

Elcot IT Parks
சென்னை: மதுரை-நெல்லையில் உருவாக்கப்பட்டுள்ள ஐடி பூங்காக்கள் அடுத்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை இலந்தைக் குளத்திலும், திருநெல்வேலியிலும் எல்காட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் சென்னையில் மாநில தரவு மையததையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னையிலிருந்து முதல்வர் கருணாநிதி இன்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டல வளாகங்களையும், சென்னை மாநகரில் அமைந்துள்ள மாநிலத் தரவு மையத்தையும் திறந்து வைக்கும் இந்த இனிய நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் சந்திப்பில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் முதல் நிலை நகரங்களில் மட்டும் நிறுவப்பட்டுச் செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்களை இரண்டாம் நிலை நகரங்களிலும் அமைத்துச் செயல்படுத்திட இந்த அரசு முடிவு செய்தது. அதன்படி இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, திருச்சிராப்பள்ளி, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் வளாகங்கள் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கான அந்நகரங்களில் பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த இடங்களுக்கு மைய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டல அங்கீகாரமும் பெறப்பட்டு உள்ளது. இந்தத் தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டல வளாகங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த பொது உள்கட்டமப்பு வசதிகளான உட்புற சிமெண்ட் சாலைகள், தரவு வடகம்பி, மின்வட்ட கம்பி மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்கள், கழிவுநீர்ச் சுத்திகரிப்பு ஆலை, தெருவிளக்குகள், சுற்றுப்புறச் சுவர், மதகு பாலங்கள், சுங்க அலுவலகக் கட்டடம், நிர்வாகக் கட்டடம் போன்ற அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மதுரையில் இரண்டு தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்களை அமைத்திட தமிழக அரசு முடிவு செய்து அதன்படி இலந்தைகுளம் கிராமத்தில் 28.91 ஏக்கர் நிலப்பரப்பையும் வடபழஞ்சி கிராமத்தில் 245.17 ஏக்கர் நிலப்பரப்பையும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு வழங்கியது. இப்பூங்காக்களக்கு 25.4.2008 அன்று அடிக்கற்கள் நாட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்படுகின்றன. இலந்தைகுளம் தகவல் தொழில்நுட்பம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 32 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

இதில் 18 கோடி ரூபாய்ச் செலவில் 50 ஆயிரம் சதுர அடி நிலப் பரப்பில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகக் கட்டங்கள், 1 கோடியே 44 லட்சம் ரூபாய்ச் செலவில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டள்ளன. இலந்தைக்குளம் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 2 தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த நிறுவனங்கள் அமைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 15 கோடி ரூபாய்ச் செலவில் பொது உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் மூன்று தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த நிறுவனங்கள் அமைய உள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த 5 ஆண்டு காலத்தில் இப்பூங்காக்களின் மூலம் 1400 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளும், 5000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், ஒரு லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் கிராமத்தில் 500 ஏக்கரில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் முதலீடு 50 கோடி ரூபாயாகும். இப்பூங்காவில் மூன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் முதற்கட்டமாக 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பொது உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் எல்காட் நிறுவனம் 50 ஆயிரம் சதுர அடிப்பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கான கட்டடம் கட்டி உள்ளது. இபபூங்காவிற்கு அடுத்த 5 ஆண்டு காலத்தில் இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கி வைக்கப்படும் 3வது திட்டம் தேசிய மின் ஆளுமை வடிவமைப்பின் தூண்களில் முக்கியமான ஒன்றான மாநில தரவு மையம் ஆகும். இந்த மாநிலத் தரவு மையம் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பெருங்குடி வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் எல்காட் நிறுனத்தின் தமிழக பெரும் பரபரப்பு வலை அமைப்புச் செயலாக்க மையம் அமைந்துள்ள அதே கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 4500 சதுரடி பரப்பளவில் 35 வழங்கிகளும், 5 வலையமைப்பு அடுக்குகளும் கொண்ட வரையறுக்கப்பட்ட மிகப் பெரிய தரவு மையமாக அமைக்கப்பட்டுள்ளது. மிகச் சிறந்த மின் சேவைகளை அரசிடமிருந்து அரசுக்கும் அரசிடமிருந்து மக்களுக்கும், அரசிடமிருந்து வணிகத்திற்கும் அளிக்கும் வகையில் இத்தரவு மையம் செயல்படுத்தப்படும்.

மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படும் இத்திட்டத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அதன் பங்களிப்பாக 55 கோடியே 80 லட்சம் ரூபாயையும் தமிழக அரசு தனது பங்களிப்பாக 5 கோடியே 16 லட்சம் ரூபாயையும் அளித்துள்ளன.

மிகச் சிறந்த மின் சேவைகளை அரசிடமிருந்து அரசுக்கும் அரசிடமிருந்து மக்களுக்கும், அரசிடமிருந்து வணிகத்திற்கும் அளிக்கும் வகையில் இத்தரவு மையம் செயல்படுத்தப்படும்.

இத்தரவு மையத்தை அமைத்ததன் மூலம் இந்தியாவிலேயே இத்தகைய நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ள முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+