டாஸ்மாக் மது விற்பனை, இருப்பு-கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
நெல்லை: சட்டசபைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பும், கட்டுப்பாடுகளும் இறுக்கமாகி வருகின்றன. டாஸ்மாக் மதுக் கடைகளில் மது விற்பனை மற்றும் இருப்பு குறித்து தினசரி கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப் 13ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 19ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடக்கிறது. தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கியுள்ளன.
பொது தேர்தலின் போது பண பலத்தை தடுக்கவும், நன்கொடை, அன்பளிப்பு, வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதை தடுக்கும் வகையிலும், வங்கியில் மொத்தமா ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக பணம் எடு்ப்பவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓரிடத்தில் இருந்து கார், வேன், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பணம் கொண்டு சென்றால் போலீசார் அதை கண்காணிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படலாம் என்பதால் பணம் எடுத்து செல்பவர்களிடம் எத்தகைய ஆதாரங்கள் உள்ளன என்பதை போலீசார் சோதனையிடுவர்.
பணம் கொண்டு செல்பவரிடம் ஆவணம் எதுவும் இல்லை என்றாலோ அல்லது முன்னுக்கு பின் முரணான பதில் கூறினாலோ அந்த பணத்தை பறிமுதல் செய்யவும் போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் தேர்தலுக்கு முன்பும், பிரசாரம், தேர்தலின் போதும் கட்சியினருக்கும், வாக்காளர்களுக்கும் மதுபான வகைகள் சப்ளை செய்யப்படும். இதனால் தேர்தலின் போது சட்டம் ஓழுங்கு, பிரச்சனை எழலாம் என்பதால் டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனையையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுகடைகளுக்கு மது வினியோகம், தினசரி விற்பனை, ஸ்டாக் உளளிட்ட விபரங்களை அந்தந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் தினமும் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.