திமுக உயர்நிலைக்குழு கூடியது... காங்கிரஸ் கூட்டணி குறித்து விவாதம்
இழுபறியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஏற்கனவே திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று 60 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்தது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை கேட்பதுடன் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகள் போதாது என்று 63 தொகுதிகள் கேட்பதும், அதுவும் எந்தெந்த தொகுதிகள் என தாங்கள் கேட்பதை கொடுக்க வேண்டும் என்பது முறைதானா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
கூடியது உயர்நிலைக் குழு...
இதுதொடர்பாக சனிக்கிழமை மாலை கூடும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் விவாதித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகளின் கருத்துக்களை திமுக தலைவர் கருணாநிதி கேட்டு வருகிறார்.
முன்னதாக நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் பொன்முடி, துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி, பொன்முடி, டி.ஆர்.பாலு ஆகியோருடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
உயர்நிலைக் குழு கூட்டத்துக்குப் பிறகு இன்று இரவு காங்கிரஸ் கூட்டணி குறித்த இறுதி முடிவை முதல்வர் கருணாநிதி அறிவிக்கிறார்.