அதிமுக-விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கு இன்று நேர்காணல்
நெல்லை: நெல்லை தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ள அதிமுகவினருக்கு இன்று சென்னையில் நேர்காணல் நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 10 தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை, சங்கரன்கோவில், நாங்குநேரி, கடையநல்லூர், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிட அதிமுக முடிவு செய்துள்ளது.
ராதாபுரம் தொகுதி தேமுதிகவுக்கும், தென்காசி தொகுதி சமத்துவ மக்கள் கட்சிக்கும், பாளை தொகுதி மனித நேய மக்கள் கட்சிக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாளை தொகுதியில் போட்டியிட மனித நேய மக்கள் கட்சி தயக்கம் காட்டி வருகிறதாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
அதிமுக தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்களில் தொகுதிக்கு மூவர் விதம் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கு செயலாளர் முருகன், யூனியன் தலைவர் சாலமோன் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்காராஜா ஆகியோரும் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இசக்கி சுப்பையா, விகேபுரம் நகர செயலாளர் குமார் பாண்டியன், மாடசாமி, ஆலங்குளம் தொகுதிக்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் எப்சி கார்த்திகேயன், சாம்பவர் வடகரை டவுன் பஞ்சாயத்து துணை தலைவர் விபி மூர்த்தி, ஆலங்குளம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சொக்கலிங்கம், வாசுதேவநல்லூர் தொகுதிக்கு புளியங்குடி நகராட்சி சேர்மன் டாக்டர் துரையப்பா, சண்முக சுந்தரம், ஜெயசங்கர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
ராதாபுரம் தொகுதிக்கு தொகுதி செயலாளர் பால்துரை, மாணவரணி செயலாளர் பால்துரை, மீனவரணி செயலாளர் ராஜா ஆகியோரும், தென்காசி தொகுதிக்கு தொகுதி செயலாளர் செல்வமோகன்தாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமி பாண்டியன் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இன்று நேர்காணல் நடக்கிறது.